#BREAKING: அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்... இபிஎஸ் அதிரடி அறிவிப்பு
அதிமுகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்
அதிமுக தலைமை மீது அதீத அதிருப்தியில் செங்கோட்டையன் இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே, வெற்றி வாகை சூடுவதற்கு, நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் செங்கோட்டையம் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மனமகிழ்ச்சியோடு எதிர்காலத்தை நோக்கி மக்கள் நினைப்பதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.
அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்து உள்ள நிலையில், அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்றிலிருந்து அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் குறிப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி என்ற சுப்பிரமணியனும் நீக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையன் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்கள் 7 பேரின் கட்சி பொறுப்பும் பறிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வரும் செங்கோட்டையன் தற்போது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். தொண்டர்களின் கருத்தை தான் பிரதிபலித்ததாக செங்கோட்டையன் கூறிய நிலையில், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கிடையில், செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.