தற்காலிக சபாநாயகராக கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா பதவி ஏற்றார்.
தமிழகத்தின் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக (Pro-tem Speaker) நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. திரு. கருப்பையா இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (ராஜ் பவன்) இன்று மாலை நடைபெற்ற எளிய விழாவில் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், திரு. கருப்பையாவிற்குச் சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராகப் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தவெக சார்பில் சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கருப்பையா, ஒரு புதிய ஆட்சியின் முதல் சட்டமன்றக் கூட்டத்தைத் தலைமை தாங்கும் கௌரவத்தைப் பெற்றுள்ளார்.
புதிய சட்டமன்றம் கூடும்போது முறையான சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கருப்பையா பின்வரும் பணிகளை மேற்கொள்வார். நாளை (மே 11) கூடவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 234 புதிய எம்.எல்.ஏ-க்களுக்கும் இவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தலை இவர் முன்னின்று நடத்துவார்.
இதையும் படிங்க: புதிய தலைமுறை; புதிய குரல்..!! தமிழக முதல்வர் விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து..!!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்ற நிலையில், நிர்வாக ரீதியான அடுத்தகட்ட நகர்வுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளை காலை சட்டமன்றம் கூடியவுடன், புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் தொடங்கி, தமிழக அரசியலில் ஒரு புதிய சட்டமன்ற அத்தியாயம் மலரவுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: முதலமைச்சராக பதவியேற்க புறப்பட்டார் விஜய்! வழிநெடுகிலும் திரண்ட தொண்டர்கள்...! சென்னையில் பலத்த பாதுகாப்பு!