×
 

கெத்தாக களமிறங்கும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’..!! இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’-யை இன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் அறிவித்த முக்கிய திட்டங்களில் ஒன்றான ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப் படை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். இந்தப் படை மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் பொறுப்பேற்ற உடனேயே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த சிறப்புப் படையை உருவாக்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, படையின் முதல் பெண் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (ஐ.ஜி.) பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இதில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, இரண்டு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், நான்கு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் இணைக்கப்பட்டுள்ளனர்.

படையில் பணியாற்றும் பெண் போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு தனித்துவமான சீருடை வழங்கப்பட்டுள்ளது. நீல நிற சட்டை, காக்கி நிற பேண்ட், கருப்பு நிற தொப்பி மற்றும் கருப்பு நிற ஷூ ஆகியவை அடங்கிய இந்த சீருடை, படையின் தனித்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக பிரத்யேக வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. 

இதையும் படிங்க: மலை உச்சியில் தீபம் ஏற்றியே தீருவோம்! நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு தமிழிசை விடுத்த எச்சரிக்கை!

இந்த அதிரடிப் படையை கடந்த 29-ம் தேதி தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் கடைசி நேரத்தில் தேதி மாற்றப்பட்டது. இன்றைய தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் விஜய் சென்னையில் படையை அங்கீகரித்தவுடன், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிங்கப்பெண் படையினர் தங்கள் பணியை உடனடியாகத் தொடங்குவார்கள்.

படையின் முக்கியப் பணிகள்:

• பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, துன்புறுத்தல் போன்றவற்றை உடனடியாகத் தடுத்தல்
• அரசு, தனியார் நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குதல்
• பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் மக்கள் இயக்கமாகச் செயல்படுதல்
• முக்கியப் பொது இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகள்
• குற்றங்கள் அதிகம் நிகழும் அல்லது நிகழ வாய்ப்புள்ள பகுதிகளை அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
• காவல்துறையின் தொடர்ச்சியான இருப்பை உறுதி செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் நம்பிக்கையை வலுப்படுத்துதல்

இந்த சிறப்புப் படை மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த பயத்தைப் போக்கி, பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்கும் முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யின் இந்த முயற்சி, சமூக நீதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் என அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இதையும் படிங்க: காயிதே மில்லத்தின் 131வது பிறந்த நாள் இன்று..!! நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மரியாதை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share