சிவகங்கை ஆகாஷ் மரணம்! உடலில் 28 காயங்கள்! பிரேத பரிசோதனையில் வெளிவந்த போலீஸ் அராஜகம்?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஆர். ஆகாஷ் டெலிசன் என்பவரின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கை, காவல்துறையினரின் சித்திரவதை குறித்த திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த விசாரணை கைதி ஆகாஷ், போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆகாஷின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் மொத்தம் 28 இடங்களில் பலத்த காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகாஷ் கடுமையாகத் தாக்கப்பட்டதன் காரணமாக அவரது மூளையில் ரத்தக்கசிவு (Brain Hemorrhage) ஏற்பட்டுள்ளது மரணத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷின் வலது காலின் நடுப்பகுதியில் உள்ள எலும்புகள் மிகக் கடுமையாக முறிந்து சிதைந்துள்ளன. இது லத்தி அல்லது கனமான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 5 ஆண்டுகளில் 27 லாக்-கப் மரணங்கள்: ஆகாஷ் உயிரிழப்பிற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
கை, முழங்கை, முழங்கால், தொடைப் பகுதிகள் என உடலின் பல்வேறு இடங்களில் சிவப்பு நிறச் சிராய்ப்புகள் மற்றும் ஆழமான கீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.
போலீசாரின் கொடூரமான தாக்குதலால் மட்டுமே இத்தனை காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இது திட்டமிட்ட லாக்கப் மரணம் (Lockup Death) என்றும் ஆகாஷின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் மற்றும் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணை என்ற பெயரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளனவா?" என்ற கோணத்தில் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார். இந்தச் சம்பவம் சிவகங்கை மற்றும் மானாமதுரை பகுதிகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதால், அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிவகங்கை என்கவுண்டர்! 36 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சுட்டு பிடிப்பு!