#LOCKUP DEATH: அடிச்சே கொன்னுட்டாங்க! கதறும் உறவினர்கள்.. 6 காவலர்கள் அதிரடியாக சஸ்பெண்ட்..!
சிவகங்கையில் நகை திருட்டு தொடர்பான விசாரணைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் ஆறு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நடந்த நகை திருட்டு தொடர்பாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தவர் அஜித் குமார். இந்த கோவிலுக்கு மதுரையை சேர்ந்த மருத்துவர் நிக்கி என்பவர் தனது தாயுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தனது தாயின் நகையை அஜித்குமார் திருட முயன்றதாக அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் அஜித் குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அஜித் குமாரை காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போதே ஐந்துக்கும் மேற்பட்டோர் அவரை தாக்கியதாக அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தில் பெரும் சோகம்... கூட்ட நெரிசலில் மூன்று பக்தர்கள் உயிரிழப்பு
தொடர்ந்து காவல் நிலையத்தில் வைத்து அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் இதனால் அவர் காவல் நிலையத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அஜித்குமாரின் உறவினர்கள் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அஜித்குமாரின் உயிரிழப்புக்கு காவலர்களின் தாக்குதலே காரணம் என அவர்கள் கூறினர்.
இந்த சம்பவத்தை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷித் ராவத், குற்றப்பிரிவு தனிப்படையைச் சேர்ந்த 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சாத்தான்குளத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சாத்தான்குளத்தில் 2020 ஜூன் மாதம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் காவல் நிலைய உயிரிழப்பு சம்பவம், காவல்துறை மீதான பொதுமக்களின் கோபத்தையும், காவலர்களின் வன்முறை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த விவாதங்களையும் தூண்டியது.
இந்த வழக்கில் 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மற்ற காவலர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தந்தை, மகன் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது நகை திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை இன்னும் கிடைக்கலையா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு...முழு விவரம்!