வேடிக்கை பாக்குறது மட்டும்தான் வேலையா? முதல்வர் ஸ்டாலினை விளாசிய நாயினார்..? அடுக்கும் கேள்விகள்..!
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் இளைஞர் அஜித்குமார் லாக்கப் மரணம் தொடர்பாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலினிடம் 9 கேள்விகள் என்ற பெயரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் பக்தர்களிடம் 10 சவரன் நகைகள் திருட்டு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோயில் ஊழியர் அஜித்தை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது இளைஞர் அஜித் இறந்தார். இந்த சம்பவத்தையடுத்து அஜித்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 தனிப்படை போலீசாரை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. ஆஷித் ராவத் உத்தரவிட்டுள்ளார். கோவில் ஊழியர் உயிரிழந்தது குறித்த வெளிப்படையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இளைஞர் அஜித்குமார் லாக்கப் மரணம் தொடர்பாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 9 கேள்விகள் என்ற பெயரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மா விவசாயிகளோட வயித்துல அடிக்காதீங்க முதல்வரே.. ஆளும் அரசை தோலுரித்த நயினார் நாகேந்திரன்..!
1. கைது செய்த அஜித்குமாரை போலீசார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதி முன் ஏன் ஆஜர்படுத்தவில்லை?
2. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை போலீசார் அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?
3. விரைந்து அஜித்குமாரை விசாரிக்கும்படி SP ஆஷிஷ் ராவத் மூலம், நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே.
அது உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?
4. மயங்கி விழுந்த அஜித்குமாரை உடனடியாக ஆஸ்பிடல் அழைத்துச் செல்லாமல், 4 மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டி வைத்தது ஏன்?
5. உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் போலீசாருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4-மணி நேரமா?
6. தாமதம், சந்தேகத்தால் அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், போலீசார் மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித்குமாரை சடலமாக ஒப்படைத்தார்கள் என்பதும் உண்மையா?
7. இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித்குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது இப்போது வரை கொலை வழக்கு பதியாதது ஏன்? கைது செய்யாதது ஏன்?
8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டம் நடத்திய அஜித் குமாரின் தம்பியான நவீனை போலீஸ் பாதுகாப்புடன் திமுக கொடி பொருத்திய வாகனத்தில் மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயன்றது எவ்வித அராஜக செயல்?
நீதியை தடுக்கும் வகையில் செயல்பட்ட அமைச்சர்கள், பொறுப்பாளர்கள் மீது வழக்கு பதிவது எப்போது?
9. இந்த ஆட்சியில் இதுவரை 24-க்கும் மேற்பட்ட லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்ப்பது தான் முதல்வரின் வேலையா?
தமிழக காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் லாக்கப் மரணங்களுக்கு முதல்வர் சொல்லப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்போது என மக்கள் கேட்பதாகவும் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: நீங்க மட்டும் ஜாலியா டூர் போறீங்களே! மக்கள பத்தி சிந்திச்சீங்களா? முதல்வரை வறுக்கும் நயினார் நாகேந்திரன்...