×
 

₹97 கோடியில் அரக்கோணம் யார்டு மறுசீரமைப்பு திட்டம் நிறைவு! தென்னக ரயில்வேயின் மெகா மைல்கல்!

தென்னக ரயில்வே சார்பில் ₹97 கோடி செலவில் அரக்கோணம் யார்டு மறுசீரமைப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

தென்னக ரயில்வேயின் மிக பரபரப்பான மற்றும் மூலோபாய நுழைவாயிலாகத் திகழும் அரக்கோணம் ரயில் நிலைய உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் நோக்கில், சுமார் 97 கோடி ரூபாய் அசுர செலவில் மேற்கொள்ளப்பட்ட அரக்கோணம் யார்டு மறுசீரமைப்புத் திட்டம் (Arakkonam Yard Remodeling Project) வெற்றிகரமாக நிறைவடைந்து உத்தியோகபூர்வமாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

சென்னை - அரக்கோணம் வழித்தடத்தின் 3-ஆவது மற்றும் 4-ஆவது விரைவுப் பாதைகளுக்கும், அரக்கோணம் யார்டுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வந்த செயல்பாட்டு முட்டுக்கட்டைகளை அடியோடு அகற்றும் வகையில் இந்த மறுசீரமைப்பு உத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரக்கோணம் சந்திப்பு தற்பொழுது அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்த, அதிக கொள்ளளவு கொண்ட ஒரு சர்வதேசத் தரம் வாய்ந்த ரயில்வே மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பானது புறநகர், முதன்மை வழித்தடம் மற்றும் ரேணிகுண்டா ரயில் செயல்பாடுகளைத் தனித்தனி செயல்பாட்டுத் தொகுப்புகளாக பிரிப்பதால், ரயில்கள் எவ்விதத் தடையுமின்றி முகப்பு சிக்னல்களில் காத்திருக்காமல் ஒரே நேரத்தில் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது ரயில்களின் சரியான நேரப் பராமரிப்பை மேம்படுத்துவதுடன், பயணிகளின் பாதுகாப்பையும் பல மடங்கு பலப்படுத்துகிறது.

யார்டு உள்கட்டமைப்பின் முக்கிய நன்மைகளாக, தரப்படுத்தப்படாத 1 டைமண்ட் கிராசிங் உட்பட 54 பழைய பாயிண்ட்டுகள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக 58 புதிய பாயிண்ட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. பயணிகள் ரயில் பாதைகளின் அனைத்து பாயிண்ட்டுகளும் 'திக் வெப் ஸ்விட்சுகளாக' மேம்படுத்தப்பட்டு, Up பாதையில் இருந்த நிரந்தர 45 கி.மீ வேகக் கட்டுப்பாடு முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில்கள் தற்பொழுது அதிக அனுமதிக்கப்பட்ட அசுர வேகத்தில் சீராக இயங்க முடிகிறது. மேலும், பயணிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், மூன்று பிளாட்பாரங்கள் 18-பெட்டிகள் என்ற நிலையிலிருந்து 24-பெட்டிகள் கொள்ளளவு கொண்டவையாக நீட்டிக்கப்பட்டு, முழு நீள பிளாட்பாரங்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து எட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. பயணிகள் எளிதாக வழிசெலுத்த ஏதுவாக பிளாட்பாரங்கள் 1 முதல் 8 வரை தர்க்கரீதியாக வரிசை எண்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்பு துறை சம்மன்! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராக உத்தரவு!

தொழில்நுட்ப ரீதியாக, 9 பரவலாக்கப்பட்ட இஐ ஹட்களைக் கொண்ட, 478 சிக்னல் வழித்தடங்களைக் கையாளக்கூடிய அதிநவீன டிஸ்ட்ரிபியூட்டட் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் தென்னக ரயில்வேயிலேயே மிகப்பெரிய எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் யார்டு கொண்ட நிலையமாக அரக்கோணம் அசுர சாதனை படைத்துள்ளது. இதுதவிர, 20 மீட்டர் அகலமுள்ள ஆர்சிசி (RCC) ஏற்றுதல் தளத்துடன் கூடிய புதிய சரக்கு முனையம் (Goods Shed) மற்றும் ரயில்களை நிறுத்தி வைப்பதற்கான மூன்று முழு நீள சரக்கு ரயில் பாதைகள் (Goods Stabling Lines) அமைக்கப்பட்டு, சரக்குக் கையாளுதல் திறனும், ரயில்கள் திரும்பும் நேரமும் (Turnaround Time) கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவெக அரசின் ஒரு உத்தரவு... கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைய போகிறதா? பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share