சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!
சட்டப்பேரவையில் சவுமியா அன்புமணி உரையாற்றினார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அங்கு நடைபெறும் பணிகள் சதுப்பு நிலத்தின் இயல்பான சூழலியலை முற்றிலும் அழித்துவிடும் என்றும், சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னை மாநகரின் முக்கிய வெள்ளநீர் சேமிப்பு மற்றும் வடிகால் பகுதியாக செயல்பட்டு வருகிறது.
மழைநீர் இங்கு சேமிக்கப்பட்டு நிலத்தடி நீரை ஊட்டும் முக்கியமான இயற்கை அமைப்பாக இது உள்ளது. மீன் வகைகள், நீர்வாழ் தாவரங்கள், மரங்கள் உள்ளிட்ட முழு சூழல் அமைப்பும் இங்கு தழைத்து வளர்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் ‘நெய்நல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள்’ என்ற பெயரில் கான்கிரீட் சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.சுமார் 21 கோடி ரூபாய் செலவில் மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. அதன் உட்புறத்தில் நடைபாதையும் அமைக்கப்படுகிறது.
சாலை ஓரங்களில் நடைபாதை இல்லாத நிலையில், சதுப்பு நிலத்திற்குள் இத்தகைய கட்டுமானம் மேற்கொள்ளப்படுவது கேள்விக்குரியதாக உள்ளது என சௌமியா அன்புமணி சுட்டிக்காட்டினார். தண்ணீர் இயல்பாக செல்லும் பாதையை இந்த சுவர் அடைத்துவிடும் என்பதால், மழைக்காலத்தில் நீர் வெளியேற வழியின்றி சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக அவர் எச்சரித்தார்.சதுப்பு நிலத்தைப் பாதுகாக்க கான்கிரீட் சுவர் தேவையில்லை. எளிய வேலி அமைத்தாலே போதுமானது. நடைபாதை தேவைப்பட்டால் சதுப்பு நிலத்திற்கு வெளியே அமைக்கலாம். சதுப்பு நிலத்திற்குள்ளேயே கடன் வாங்கி நடைபாதை அமைப்பது அவசியமற்றது என அவர் கேள்வி எழுப்பினார். இப்பணிகள் தொடர்ந்தால் மீன், தாவரங்கள் உள்ளிட்ட முழு சூழல் அமைப்பும் அழியும். வெள்ளத்தால் குடியிருப்புகள் மூழ்கும் அபாயம் மட்டுமல்லாமல், தேங்கிய நீரால் கொசுக்கள் பெருகி நோய்கள் பரவும் அபாயமும் அதிகரிக்கும். சமீபத்திய இடைவிடாத மழையிலேயே இப்பகுதியில் நீர் தேங்கத் தொடங்கியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளால் பெருமளவு சுருங்கிவிட்ட நிலையில், அரசு தானே இத்தகைய கட்டுமானங்களை மேற்கொள்வது அதை மேலும் அழிக்கும் செயலாகும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, எல்லைகளை நிர்ணயித்து, ராம்சார் தளமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பணியை உடனடியாக நிறுத்தி, ஏற்கனவே அமைக்கப்பட்ட கட்டுமானங்களை அகற்றி இயற்கை நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக சுத்தம் செய்து மறுசீரமைக்கும் பணிகளுக்கு நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதற்கான விரிவான திட்டம் தேவை. இயற்கை நீரோட்டத்தைத் தடுக்கும் வகையில் கான்கிரீட் கட்டுமானங்கள் அமைப்பது பாதுகாப்பு அல்ல, அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை அரசு உணர வேண்டும் என சௌமியா அன்புமணி வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்... சபாநாயகர் திட்டவட்டம்.!! அமளியில் ஈடுபட்ட திமுகவினர் வெளிநடப்பு..!!