வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா! ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற நாகப்பட்டினம் வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா திருத்தலப் பெருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல ஏதுவாக ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திரளும் வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு விரிவான சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை தினசரி சிறப்புப் பேருந்துகள் முழுவீச்சில் இயக்கப்படவுள்ளன.
குறிப்பாக, வேளாங்கண்ணி ஆலயத்தில் முக்கிய நிகழ்வான திருவிழாக் கொடியேற்றத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 28 அன்று சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கு 150 சிறப்புப் பேருந்துகளும், ஆகஸ்ட் 29 அன்று வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கு 150 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதேபோன்று, விழாவின் நிறைவு நாளான செப்டம்பர் 8-ஆம் தேதி திருவிழாக் கொடியிறக்க நிகழ்வை முன்னிட்டு சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும், மறுமார்க்கமாக வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கும் தலா 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், இடைப்பட்ட நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!
தொலைதூரப் பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in மற்றும் அதிகாரப்பூர்வ கைபேசி செயலி (TNSTC Official App) வழியாக இருமார்க்கப் பயணத்திற்கும் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், குழுவாகப் பயணம் செய்ய விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ஒப்பந்த அடிப்படையிலும் பிரத்யேகப் பேருந்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும், இந்தச் சிறப்புப் போக்குவரத்துச் சேவையை பக்தர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் போக்குவரத்துக் கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: 10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!