×
 

ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை.. சிறப்புப் புலனாய்வுக்குழு முடிவு..

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான ஞானசேகரனிடம் குரல் பரிசோதனை நடத்த சிறப்புப் புலனாய்வுப் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த விவகாரம் குறித்து பெண்ணின் பெற்றோர் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களும் அதிரடியாக விசாரணை நடத்தி அதேபகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். 

இந்த வழக்கை தாமாக முன்வந்து பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்தது. அவர்களும் கோட்டூர்புரம் போலீசாரிடம் இருந்து கோப்புகளை பெற்று விசாரணையைத் தொடங்கினர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரித்தது சிறப்பு புலனாய்வு பிரிவு. அப்போது வலிப்பு வந்தது போல் நாடகமாடினான் ஞானசேகரன். அதன்பின்னர் எழும்பூர் காவல்நிலையம், அண்ணா நகர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: அடடே இது புதுசா இருக்கே.. அன்னதானம் சாப்பிடுவது போல் நுழைந்து ஆர்பாட்டம்.. இந்து முன்னணி மகளிர் அமைப்பினர் கைது..

இந்நிலையில் சம்பந்தபட்ட மாணவியை மிரட்டி அதன்பின்னரே ஞானசேகரன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளான். எனவே நீதிமன்றத்தில் குற்றத்தை முழுமையாக நிரூபிக்க ஞானசேகரனிடம் குரல் பரிசோதனை நடத்த சிறப்புப் புலனாய்வு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அரசியல் பின்புலம் இருக்கலாம் என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. யார் என்ற சார் என்ற முழக்கத்தை எழுப்பி அதிமுக போராட்டங்களை முன்னெடுத்தது. சட்டசபையிலும் அதுபற்றி பேசியது.

அதேபோன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு ஒன்றையும் அளித்திருந்தார்.

அந்தவகையில் தமிழ்நாட்டின் முக்கிய வழக்காக இருக்கும் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எதிர்கட்சிகள் எந்த இடத்திலும் குற்றஞ்சாட்டி விட முடியாத அளவுக்கு விசாரணை இருக்க வேண்டும் என்பதில் சிறப்புப் புலனாய்வு பிரிவினர் உறுதியாக உள்ளனர்.
 

இதையும் படிங்க: இன்னொரு அயோத்தி ஆகிறதா திருப்பரங்குன்றம்..? 144 தடை உத்தரவு போட வேண்டிய அவசியம் ஏன்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share