பாவம் சும்மா விடுமா? கைகளின் ரத்தக்கறையை எந்த நாடகத்தாலும் துடைக்க முடியாது… சாடிய நயினார்…!
திருவள்ளூரில் சுவர் இணைந்து மாணவன் உயிரிழந்த சம்பவத்தை சுட்டி காட்டி நயினார் நாகேந்திரன் முதல்வரை சாடி உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாரபுரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஒரு சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளியின் பக்கமாட்டுச் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மோகித் என்ற மாணவன் உயிரிழந்து உள்ளார். மதிய உணவு இடைவேளைக்காக நடைமேடைமீது அமர்ந்து மோகித் உணவு அருந்திக்கொண்டு இருந்துள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக பள்ளியின் பக்கமாட்டு சுவர் சரிந்து விழுந்துள்ளது. மோகித்தின் மேலே சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, அரசுப் பள்ளி மாணவர்களைக் திமுக அரசு காவு வாங்குவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். படித்து முன்னேற வேண்டும் என்னும் நம்பிக்கையில் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பினால், பிள்ளைகளின் தலையில் சுவரை இடிந்து விழச் செய்து, பெற்றோர் வயிற்றில் இடியை இறக்குவது தான் பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலமா என்று கேட்டார்.
கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பிரம்மாண்டமாக விழாக்களை நடத்தத் திராணியிருக்கும் திமுக அரசுக்கு அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மனமில்லை என்பது எவ்வளவு கேவலமானது என்றும் இன்னும் எத்தனைப் பிஞ்சு உயிர்களைக் காவு வாங்கினால் திமுக அரசின் விளம்பர மோகம் முற்று பெற்று, மாணவர்களின் நலன் மீது அக்கறை வரும் எனவும் கேட்டு உள்ளார்.
இதையும் படிங்க: சம உரிமைக் கல்வியை பறிக்கும் திமுக... நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருப்பதாக நயினார் விமர்சனம்..!
அரசுப் பள்ளி மாணவர்களின் உயிரோடு விளையாடிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் கைகளில் உள்ள இந்த இரத்தக் கறையை இனி எத்தனை விளம்பர நாடகங்களைக் கொண்டும் துடைத்தெறிய முடியாது என்றும் தெரிவித்தார். அலட்சியப் போக்காலும், திறனற்ற நிர்வாகத்தாலும் ஏழை எளிய மாணவர்களின் உயிரைப் பறித்துவிட்டு, மத்திய அரசின் நவோதயா பள்ளிகளையும் வரவிடாமல் தடுத்துவிட்டு, அப்பா என்னும் நாடகம் போடும் இந்தப் பாவம் திமுக அரசை சும்மா விடாது என்றும் சாடினார்.
இதையும் படிங்க: வஞ்சிக்கப்படும் விவசாயிகள்..! நாடு போற்றும் நல்லாட்சி? நல்லாருக்கு லட்சணம்.. நயினார் விமர்சனம்...!