இடதுசாரிகளை குறிவைப்பதா? உயர்கல்வித் துறை சர்ச்சை சுற்றறிக்கைக்கு சு. வெங்கடேசன் கண்டனம்!
உயர்கல்வித் துறை சுற்றறிக்கை எதேச்சதிகாரச் செயல் என்றும் இதன் பின்னணியில் உள்ள தலைமைச் செயலாளர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர் போராட்டங்களைக் கண்காணிக்கும்படி உயர்கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையானது, அரசு நிர்வாகத்தை இடதுசாரி அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல் முனைநோக்கி நகர்த்தும் வெளிப்படையான முயற்சி என மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்களின் நியாயமான உரிமைப் போராட்டங்களை ஒடுக்குவதும், குறிப்பாக இடதுசாரி இயக்கங்களை மட்டும் குறிவைத்துச் செயல்படுவதும் அப்பட்டமான எதேச்சதிகாரச் செயல்பாட்டின் வெளிப்பாடு எனச் சாடியுள்ளார். ஜனநாயக மரபுகளுக்கு எதிராக அரசு எந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!
மேலும், இத்தகைய ஜனநாயக விரோத சுற்றறிக்கை மற்றும் உத்தரவுகளின் பின்னணியில் மூளையாகச் செயல்படும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், அந்த உயரிய பதவியில் நீடிப்பதற்கு எவ்வித தார்மீகத் தகுதியும் அற்றவர் என்று சு. வெங்கடேசன் விமர்சித்துள்ளார். எனவே, இடதுசாரிகளை ஒடுக்கும் நோக்கில் செயல்பட்ட தலைமைச் செயலாளர் மீது தமிழக அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ₹25 லட்சம் காப்பீட்டுக்கு ₹4,000 கோடி நிதி ஒதுக்கீடு எங்கே? தவெக அரசை நோக்கி திமுக கேள்வி!