×
 

"சிபிஎஸ்இ சிறப்பு மதிப்பீட்டு முறையில் தலையிட முடியாது!" - உச்சநீதிமன்றம் அதிரடி!

வளைகுடா நாடுகளில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ சிறப்பு மதிப்பீட்டு முறையில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து மனுக்களை முடித்து வைத்தது.

வளைகுடா நாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிமுகப்படுத்திய சிறப்பு மதிப்பீட்டு முறையில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில் நிலவிய போர் மற்றும் பாதுகாப்புச் சூழல் காரணமாகச் சில பாடங்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டுக்காகச் சிறப்பு மதிப்பீட்டு முறையைச் சிபிஎஸ்இ அறிவித்தது. இந்த நடைமுறையை எதிர்த்துச் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளில் பயிலும் மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பிரசன்னா பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்குப் பதிலாக, பள்ளி அளவிலான காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையில் கொண்டு மதிப்பெண் வழங்கும் முறையை மாணவர்கள் எதிர்த்தனர்.

இதையும் படிங்க: "அணைகளில் தண்ணீர் இல்லை!" – தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறக்க முடியாது எனப் பிடிவாதம் காட்டும் கர்நாடகா!

இதனால் தங்களுக்கு எதிர்பார்ப்பை விடக் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாகவும், வெளிநாட்டு இந்திய மாணவர்களுக்கான DASA மற்றும் CIWG உயர்கல்விச் சேர்க்கைகளில் தேவையான 75% குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற முடியாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. ஜே.இ.இ. மெயின் தேர்வில் தகுதி பெற்ற சில மாணவர்கள்கூட இதனால் சேர்க்கை வாய்ப்பை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வழக்கமான தேர்வுகளுக்குப் பதிலாகக் கம்பார்ட்மென்ட் தேர்வு எழுதும் மாணவர்களுடன் இணைந்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், "வளைகுடா நாடுகளில் சுமார் 23,052 மாணவர்கள் இச்சூழலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு விரைவான மறுமதிப்பீடு, தற்காலிக மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்விச் சேர்க்கைக்கு உதவுதல் மற்றும் சூழல் சாதகமாகும்போது சிறப்புத் தேர்வு நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.

சிறப்புத் தேர்வு நடத்துவதற்கான கால அவகாசத்தை 82 நாட்களில் இருந்து 70 நாட்களாகக் குறைப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் விரைவில் அடுத்த சிறப்புத் தேர்வில் பங்கேற்று, வரும் கல்வியாண்டில் உயர்கல்விச் சேர்க்கையைப் பெறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, உச்சநீதிமன்றம் இந்த மனுக்களை முடித்து வைத்தது.

 

இதையும் படிங்க: கெருகம்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம்! நள்ளிரவு ரெய்டு! ரூ.14.25 லட்சம் பறிமுதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share