38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வேன்! அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு!
தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்துவேன் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் பல்வேறு அரசு உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்த அமைச்சர் ராஜ்மோகன், அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல விபரங்களை அதிரடியாக வெளியிட்டார். ஒரு அமைச்சர் என்கிற முறையைத் தாண்டி, ஒரு அன்பான சகோதரனாக நான் ஒட்டுமொத்தக் கல்வித்துறைக்கும் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய எந்தவொரு அரசுப் பள்ளிக்கூடத்திற்கும் எப்போது வேண்டுமானாலும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நான் நேரில் திடீர் ஆய்வு செய்ய வருவேன். இதனை யாரும் வீண் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்; அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது முழுப் பொறுப்புணர்வாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒரு கூட்டுப் பொறுப்புணர்ச்சியுடன் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உன்னத இடத்தில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். நான் சும்மா சொல்லிவிட்டுச் சம்பிரதாயத்திற்காக வந்து போவதற்கில்லை. தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொள்வோம்; எனவே அனைத்துப் பள்ளிகளையும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும்.
சாலைகளில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் விலையில்லா நோட்டு புத்தகப் பைகள் வீசப்பட்டது தொடர்பான சமூக வலைத்தளப் புகார்களுக்குப் பதிலளித்த அமைச்சர், இது குறித்து உடனடியாகச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நான் விளக்கம் கேட்டேன். அந்த குறிப்பிட்ட பள்ளிக்கூடத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஏற்கனவே பெற்றோர்கள் பேன்சியான நோட்டுப் புத்தகப் பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்கள். அந்தக் குழந்தைகள் வீட்டில் உள்ள பையை விரும்பியதால், பள்ளியில் வழங்கிய அரசுப் பையை வாங்கிவிட்டு, அதற்குள் இருந்த கல்விப் பொருட்களைத் தங்களது புதிய பையில் மாற்றி வைத்துள்ளனர். பின்னர் போகும் போது விளையாட்டாக அந்த அரசுப் பையைத் தூக்கி எறிந்துள்ளனர். இதைச் சிலர் போட்டோ, வீடியோ எடுத்துப் பரப்பியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இது சுட்டிக்காட்டப்பட்ட உடனே, சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் அந்தப் பையைப் பறிமுதல் செய்து பத்திரமாக எடுத்து வைத்துள்ளார். எவ்வளவோ ஏழை குழந்தைகள் இருக்கிறார்கள், உரிய முறையில் மற்ற குழந்தைகளுக்கு அது கொண்டு சேர்க்கப்பட்டது. அனைவருக்கும் சமமாக அரசின் நலத்திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதுதான் எங்களது உத்திசார் திட்டம் என்றார்.
இதையும் படிங்க: விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன்: தளபதி பெயரை காப்பாற்றுவோம் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!
நீட் தேர்வு ரத்து மசோதா மற்றும் பல முக்கியத் தீர்மானங்களைச் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றுவது குறித்து தற்பொழுது பல்வேறு உத்திசார் ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; அது என்னவென்று தெரிய வரும், தற்போதைக்கு 'வெயிட் அண்ட் வாட்ச்' (Wait and Watch)" என்று அமைச்சர் ராஜ்மோகன் தனது பேட்டியை அனல் பறக்க முடித்தார்.
இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை நடைமுறை அதுதான்!": தமிழ்த்தாய் வாழ்த்துச் சர்ச்சை குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!