×
 

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்... எந்த பயிருக்கு எவ்வளவு நிதி?

தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, வேளாண் துறை அமைச்சர் வினோத் உரையாற்றினார்.

தமிழக சட்டப்பேரவையில் 2026–27ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், பயிர் பாதுகாப்பை வலுப்படுத்தவும் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். சாமந்தி மலர் சாகுபடி முதல் தென்னை, வாழை மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் திட்டம் வரை பல்வேறு நடவடிக்கைகளுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகளில், சாமந்தி மலர் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கில் எல்.இ.டி. (LED) விளக்குகள் வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மலர் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்த அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கருதப்படும் சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அந்த நிலங்களை மீண்டும் விவசாய பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக ரூ.4 கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயன்பாடின்றி உள்ள நிலங்களை சாகுபடிக்குத் தகுந்த வகையில் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

இதையும் படிங்க: இல்லத்தரசிகளுக்கு சூப்பர் திட்டம்! வீட்டுத் தோட்டம் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

இயற்கை சீற்றங்கள் மற்றும் பலத்த காற்றால் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைவதைத் தடுக்க, வாழைக் கன்றுகளுக்கு முட்டுக்கொடுக்கும் திட்டத்திற்காக ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் வாழை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு முக்கிய ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தென்னை விவசாயத்தை ஊக்குவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.16 கோடி மதிப்பில் தென்னை மேம்பாட்டுச் சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் திறனை உயர்த்துவதோடு, தரமான விளைச்சலை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் உற்பத்தியை அதிகரித்தல், பயிர் பாதுகாப்பு, விவசாயிகளின் வருமான உயர்வு மற்றும் நீடித்த விவசாய வளர்ச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு பயிர்களை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த புதிய திட்டங்கள், மாநிலம் முழுவதும் விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

இதையும் படிங்க: அதிக மகசூல் எடுத்தால் ரூ.2.50 லட்சம் பரிசு! நம்மாழ்வார், அஞ்சலையம்மாள் பெயரில் விருது! அசத்தல் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share