தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய மனு!
தங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி, அவர்களது தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை அடுத்தடுத்த தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, அந்த தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதேபோல், வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வெற்றி பெற்றதை எதிர்த்தும் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்குகளை நிராகரிக்கக் கோரி உரிய மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அவ்வாறு மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்புக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்!
இந்த நிலையில், நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு வழக்குகள் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, தங்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்குகளின் விசாரணையை வெவ்வேறு தேதிகளுக்கு நீதிபதி ஒத்திவைத்தார். பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் தொடர்ந்த வழக்கும், வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.
அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து இனிகோ இருதயராஜ் தொடர்ந்த வழக்கும், பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வெற்றியை எதிர்த்து லட்சுமி நரசிம்மன் தொடர்ந்த வழக்கும் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால், முதல்வர் விஜய்யின் தேர்தல் வெற்றியைச் சுற்றி தொடரப்பட்டுள்ள வழக்குகளில் அடுத்தடுத்த விசாரணைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!