×
 

பிரதமர் மோடி பேச்சுக்கு தலையசைத்த கவர்னர்! எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி! கான்வாய் வாகனங்கள் குறைப்பு!

மேற்காசிய போர் நெருக்கடியை கருத்தில் கொண்டு எரிபொருள் பயன்பாட்டை குறைத்து சிக்கனமாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்காசியப் போர் நெருக்கடி காரணமாக எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பை ஏற்று தமிழக கவர்னர் அர்லேகர் தனது பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளார். இந்த நடவடிக்கை எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஏற்கனவே பீகார் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி மற்றும் மராட்டிய முதலமைச்சர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கையை குறைத்தனர். டெல்லி அரசும் அனைத்து அரசுத் துறை ஊழியர்களும் வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் வகையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தச் சூழலில் தமிழக கவர்னரின் முடிவு மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழக கவர்னர் அர்லேகர் தற்போது தனது பாதுகாப்பு வாகனங்கள் எண்ணிக்கையை 4 ஆகக் குறைத்துள்ளார். முன்பு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது இந்த எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கனத்தை மனதில் கொண்டு, பிரதமரின் அழைப்புக்கு முழு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கவர்னர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படிங்க: தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவில் சாதனை நடக்கணும்!! மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்காசியப் பகுதியில் நிலவும் போர் நெருக்கடி உலக அளவில் எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரும் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். அரசு அதிகாரிகள், முதலமைச்சர்கள் மற்றும் பிற பொது பிரதிநிதிகள் இந்த அழைப்புக்கு உடனடியாக பதிலளித்து வருகின்றனர்.

தமிழக கவர்னரின் இந்த நடவடிக்கை பலரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “அரசு அதிகாரிகள் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்பதை இது நிரூபிக்கிறது” என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எரிபொருள் இறக்குமதியை குறைப்பதன் மூலம் வெளிநாட்டு செலவை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இத்தகைய முயற்சிகள் உதவும் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்த மாதிரியான சிக்கன நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் அழைப்பு நாடு முழுவதும் எதிரொலித்து வரும் நிலையில், தமிழக கவர்னரின் முடிவு பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் நம்புகின்றன.

இதையும் படிங்க: MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share