சட்டசபையில் தவெக உறுப்பினர்களை விட திமுக, அதிமுகவுக்கு அதிக வாய்ப்பு கொடுத்தேன்! சபாநாயகர் பேச்சால் கலகல!
சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களைவிட எதிர்க்கட்சியான திமுக மற்றும் ஏற்கனவே ஆட்சியில் இருந்த அதிமுக உறுப்பினர்களுக்கு அதிக நேரம் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கியுள்ளதாக சபாநாயகர் கூறினார்.
தென்காசியில் நடைபெற்ற பள்ளி கட்டிட திறப்பு விழாவில் பேசிய சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களைவிட திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களுக்கு அதிக நேரம் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
தென்காசி மாவட்டம் பரங்குன்றாபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியின் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இதற்கான பணியை மேற்கொண்ட ஜெயசிங்கிற்கு பாராட்டு தெரிவித்தார். அவரது கல்விப் பணி தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
இதையும் படிங்க: அவதூறு, ஆபாச பேச்சு! அதுதான் தி.மு.க.வின் DNA! அமைச்சர் ரமேஷ் சரமாரி குற்றச்சாட்டு!
நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நீண்டகால கோரிக்கையான இரட்டைக் குளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என மனு அளிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். இந்த கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து சட்டசபை செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், தற்போதைய முதல்வர் அதிகமாக பேசவில்லை என்ற விமர்சனம் சிலரால் முன்வைக்கப்படுவதாக குறிப்பிட்டார். ஆனால், அதிகமாக பேசுவதைக் காட்டிலும் செயல்பாடுகள் மூலம் மக்களை கவர முடியும் என்பதற்கு முதல்வரின் செயல்பாடுகள் உதாரணமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சட்டசபையில் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களைவிட எதிர்க்கட்சியான திமுக மற்றும் ஏற்கனவே ஆட்சியில் இருந்த அதிமுக உறுப்பினர்களுக்கு அதிக நேரம் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கியுள்ளதாக சபாநாயகர் கூறினார். எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கேள்விகளை எழுப்பும்போதுதான் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சட்டசபையின் கவனத்திற்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
சபாநாயகர் என்ற முறையில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்கி வருவதாகவும் ஜே.சி.டி. பிரபாகர் கூறினார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு குறுகிய காலத்திலேயே மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், அதன் தலைவரும் முதல்வருமான விஜய் தொடர்ந்து தனது செயல்பாடுகள் மூலம் மக்களை கவர்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு கட்சி துண்டு? தூத்துக்குடி விழாவில் அமைச்சர் ஸ்ரீநாத் செயலால் புதிய சர்ச்சை!