2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!
தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வரும் 2031-க்குள் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை உச்சத்திற்குக் கொண்டு செல்லவும், சுற்றுச்சூழல் மாசற்ற பசுமைப் போக்குவரத்தை உறுதி செய்யவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வெற்றி தமிழகம் தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஒரு பிரம்மாண்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் மாநிலம் முழுவதும் 20,000 பொது மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்கத் தமிழக அரசு அதிரடியான கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது.
இதன் முதற்கட்டமாக, கடந்த 13.07.2026 அன்று தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 14.07.2026 அன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையில், ITDP India மற்றும் Guidance Tamil Nadu அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற உயர்மட்ட தொழில்நுட்பக் குழுக்கூட்டம் அரங்கேறியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பைப் போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்துவதற்கான பல்வேறு திருப்புமுனை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த உயர்மட்டக் கூட்டத்தின் ஆகப்பெரும் முக்கிய முடிவாக, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள உயரழுத்த மற்றும் அதிஉயரழுத்த மின் இணைப்புகளின் அனுமதிக்கப்பட்ட மின் சுமை வரம்பிற்குள்ளேயே, புதிய EV சார்ஜிங் வசதிகளுக்குத் தனியாக ஒரு 'துணை மின் மீட்டர்' அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்கீம் மூலம், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி பார்க்குகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் இனி தனியாக ஒரு புதிய மின் இணைப்பு பெற வேண்டிய அவசியமில்லை.
இதையும் படிங்க: மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!
மிக முக்கியமாக, இந்த துணை மின் மீட்டர்களுக்கு எவ்விதமான நிலைக்கட்டணமோ அல்லது குறைந்தபட்ச மாதாந்திர கட்டணமோ விதிக்கப்படாது என்பதால், நுகர்வோர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். அவர்கள் மின் வாகன மின் கட்டணத்தின் கீழ் தங்களது மின்பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. கூடுதல் மின் உள்கட்டமைப்புச் செலவுகள் எதுவும் இன்றி, மிகக் குறைந்த முதலீட்டிலேயே விரைவாகச் சார்ஜிங் நிலையங்களை உருவாக்க இந்த அம்சம் வழிவகுக்கும். அதேவேளையில், தங்களுக்குத் தேவைப்படும் இடங்களில் தற்போதைய மின் சுமை மற்றும் கட்டணப் பிரிவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பிற்காக தனியாக ஒரு புதிய மின் சேவை இணைப்பைப் பெற்றுக் கொள்ளும் மாற்று வசதியும் நுகர்வோருக்கு தாராளமாக வழங்கப்படவுள்ளது.
மேலும், மாநிலத்தில் மின்வாகனச் சார்ஜிங் உள்கட்டமைப்புக்கான முதலீடுகளைக் காந்தம் போல ஈர்க்கும் நோக்கில், 'தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023'-ல் சில அதிரடி திருத்தங்களை மேற்கொள்ள அரசுக்குப் பரிந்துரைக்கவும் இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்முனைவோர்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களைப் பெருமளவில் ஊக்குவிக்கும் வகையில், பிரத்யேக மின் வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான (EV Charging Station) தனித்துவமான மின் கட்டணப் பிரிவில் தற்போது நடைமுறையில் உள்ள நிலைக்கட்டணம் அல்லது குறைந்தபட்ச மாதாந்திர கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்யவோ அல்லது அதனை மிகக் கணிசமாகக் குறைக்கவோ அரசுக்குப் பரிந்துரைக்கப்படவுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும், சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் உள்ள ஆரம்பகட்ட முதலீட்டுத் தடைகளைத் தகர்த்தெறிந்து, தனியார் முதலீடுகளை வெள்ளமெனக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2031-க்குள் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் என்ற தமிழக அரசின் இலக்கு எட்டப்படுவதோடு, இந்தியாவின் பசுமைப் போக்குவரத்து மற்றும் சுத்தமான எரிசக்தி பயன்பாட்டில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழும் என கூடுதல் இயக்குநர் (ம.தொ.), தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தஞ்சை நெல் மூட்டை விபத்தில் பெண் பலி! முதல்வர் விஜய் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு!