×
 

தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்! உள் மாவட்டங்களில் 3°C வரை உயர வாய்ப்பு!

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் கோடை வெயில் தனது விஸ்வரூபத்தை எடுத்து வரும் நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென் தமிழகம் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாகச் சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல இடங்களில் வறண்ட வானிலையே நிலவியது. கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 40.5°C வெப்பம் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் திருத்தணியில் 23.8°C அளவும், மலைப் பகுதிகளில் கொடைக்கானலில் 10.7°C அளவும் பதிவாகியுள்ளது.

இன்று முதல் வரும் 18-ஆம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு படிப்படியாக 2-3°C வரை உயரக்கூடும். இது இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலோரப் பகுதிகளில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், அதிக ஈரப்பதம் காரணமாக ஒருவித அசௌகரியமான சூழல் (Discomfort) நிலவக்கூடும்.

இதையும் படிங்க: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை ஆரம்பம்!

தெற்கு அசாம் முதல் தென் தமிழகம் வரை நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக:ஏப்ரல் 14 முதல் 20 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள், இராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நீடிக்கும். 


சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36-37°C வரையிலும், குறைந்தபட்சமாக 26-27°C வரையிலும் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. இன்று முதல் வரும் 18-ஆம் தேதி வரை தமிழகக் கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கான பிரத்யேக எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி முனைவர் வி. ஆர். துரை தெரிவித்துள்ளார்.

கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், போதிய அளவு நீர் அருந்துமாறும், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெயிலில் செல்வதைத் தவிர்க்குமாறும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: இன்று 4 மாவட்டங்களில் கனமழை! தமிழகத்தில் நீடிக்கும் கோடை மழை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share