×
 

சம வேலைக்கு சம ஊதியம்... இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு... போராட்டம் தொடரும் என திட்டவட்டம்...!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நீண்டகாலமாக "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்தப் பிரச்னை கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ஒரு ஊதிய முரண்பாட்டால் உருவானது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது.

ஒரே மாதிரியான பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும், இந்த வேறுபாடு இருப்பதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது ஏறத்தாழ 20,000 ஆசிரியர்களைப் பாதித்துள்ளது.இந்த முரண்பாடு ஊதிய ஆணைய மாற்றங்களால் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற தீர்ப்புக்கு எதிரானது என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள் போராடியபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் (வரிசை எண் 311) இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இது நிறைவேற்றப்படவில்லை என்பதே ஆசிரியர்களின் முக்கிய குற்றச்சாட்டு. தொடர்ந்து இடைநிலையாசிரியர்கள் போராடி வருகின்றனர். நேற்றைய தினம் எழும்பூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி பி ஐ அலுவலகம் அருகே ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஓய மாட்டோம்... 6வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்... DPI அலுவலகம் முற்றுகை...!

தொடர்ந்து ஆறாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: போலீஸ் எங்கள சித்திரவதை செய்றாங்க... 5வது நாளாக போராடும் இடைநிலை ஆசிரியர்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share