25வது நாளாக தொடரும் போராட்டம்..! கோட்டை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் இடைநிலை ஆசிரியர்கள்..!
கோட்டை ரயில் நிலையத்தை முற்றுகை இடுவதற்காக ஏராளமான இடைநிலை ஆசிரியர்கள் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு சம ஊதியம்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ஒரு நீதிக்கான போராட்டம். குறிப்பாக, 2025 டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய தொடர் போராட்டம் சென்னையில் தீவிரமடைந்து, 2026 ஜனவரி தொடக்கத்திலும் நீண்டு வருகிறது.
இந்தப் பிரச்சினையின் அடிப்படை 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் தொடர்புடையது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் எண்.311-இல் தெளிவாக வாக்குறுதி அளித்தது. வாக்குறுதி படி, சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. நல்ல முடிவு எட்டப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்து இருந்த நிலையில் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று திட்டவட்டமாக இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர். தங்கள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தியதாக 400 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 5 அறிவிப்புகளால் ஆட்டம் கண்ட திமுக.. காப்பி அடிச்சோமா? செல்லூர் ராஜு பேட்டி..!
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் 25வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோட்டை ரயில் நிலையத்தை முற்றுகை இடுவதற்காக ஏராளமான ஆசிரியர்கள் சென்றனர். கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு ரயில் நிலையத்தை முற்றுகையிட ஆசிரியர்கள் சென்றுள்ளனர். பத்து நாட்களுக்கும் மேலாக வகுப்புகளை புறக்கணித்து இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் தேர்தல் களம்... ஓசூரில் திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம்..!