×
 

தமிழ்நாடு இந்தியாவின் வழிகாட்டி! கோவையில் தேஜஸ்வி யாதவ் புகழாரம்!

தேர்தலுக்கு மத்தியிலும் பாஜகவின் தொகுதி மறுவரையறை மசோதாவை தோற்கடிக்க முக்கிய பங்கு வகித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் தேஜஸ்வி யாதவ் புகழாரம்.

கோவையில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) தலைவரும் பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் கலந்துகொண்டு 'இந்தியா' கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது, இந்தியாவின் வளர்ச்சிக்குத் தமிழ்நாடு ஒரு வழிகாட்டியாகத் திகழ்வதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ராஜீய நடவடிக்கைகளால் டெல்லியின் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தமிழ்நாடு முன்னுதாரணமாகத் திகழ்வதாகத் தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டார். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடியாகத் திகழ்கிறது. சமூக நீதியையும் வளர்ச்சியையும் இணைத்துச் செயல்படுத்தும் திராவிட மாடல் ஆட்சியை ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்க்கிறது.

நாடாளுமன்றத்தில் நேற்று தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்ததில் முதலமைச்சர் ஸ்டாலினின் பங்கை அவர் விவரித்தார். பாஜகவின் உள்நோக்கம் கொண்ட தொகுதி மறுவரையறை மசோதாவைத் தேசிய அளவில் முறியடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக முக்கியப் பங்காற்றினார். 

இதையும் படிங்க: டெல்லியை வீழ்த்தியது தமிழகம்! மசோதா தோல்வி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி ட்வீட்!

தென்னிந்திய மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் இந்தச் சதிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டிய பெருமை அவருக்கு உண்டு. இன்று அந்த மசோதா வீழ்ந்திருப்பது மாநில உரிமைகளுக்குக் கிடைத்த வெற்றி.

2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் டெல்லிக்கு ஒரு வலுவான செய்தியைச் சொல்லும். இந்தியா கூட்டணியின் இந்த ஒற்றுமை, எதிர்வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வகுப்புவாத அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றும், மொழி மற்றும் கலாச்சார அடையாளங்களைக் காக்க திமுகவிற்குப் பெரும் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கோவை கொடிசியா மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் தேஜஸ்வி யாதவ் ஆற்றிய இந்தப் பேச்சு, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.

இதையும் படிங்க: தருமபுரி பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போட்ட மண்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share