×
 

தள்ளிப்போகும் தாய்மாமன் தங்க மோதிர திட்டம்..! ஏன்..? எதற்காக.? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்..!!

தாய் மாமன் தங்க மோதிர திட்ட தொடக்க விழா தள்ளிப்போகிறது.

தமிழக அரசின் முக்கிய மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் லண்டன் செல்வதால் இந்த விழாவை அவரால் நேரில் தொடங்கி வைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால், திட்டத்தின் முறைப்படி துவக்கும் தேதியை பின்னர் அறிவிப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானதாக இருந்த இந்தத் திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. தமிழர் பாரம்பரியத்தில் தாய் மாமன் குழந்தைக்கு சீர் வழங்கும் வழக்கத்தை அரசு தன் ஆசீர்வாதமாக மாற்றியமைத்துள்ளது. முதலமைச்சர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சுகாதார மையங்களில் பிறக்கும் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியுடையவர்கள்.

தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். பாலின பாகுபாடின்றி அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்கப்படும்.திட்டத்திற்காக ஆண்டுதோறும் சுமார் 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மோதிரங்கள் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மோதிரங்கள் 22 காரட் தரத்தில் தயாரிக்கப்பட்டு, அடையாளச் சான்றிதழுடன் வழங்கப்படும். தங்கத்தின் விலை தினசரி சந்தை விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும். ஒப்பந்தப் புள்ளிகளின் அடிப்படையில் இரண்டு நகை நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல் கட்ட மோதிரங்கள் தயாரித்து பேக்கிங் செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இதையும் படிங்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட டெண்டர் விளக்கம்! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பும் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நாளில் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் விழாக்கள் நடத்தி, முதல் தொகுப்பு மோதிரங்களை வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளதால், அந்தத் தேதியில் அவரால் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொடக்க விழாவை தள்ளிவைத்து, புதிய தேதியை விரைவில் அறிவிப்பதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

 

 

இதையும் படிங்க: 17 ஆண்டுகளுக்குப் பிறகு... மீனாட்சி அம்மன் மகா குடமுழுக்கு..! தேதியை அறிவித்த கோவில் நிர்வாகம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share