தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்பு... வளம் காணப்போகும் திருநெல்வேலி, தூத்துக்குடி..
நதிநீர் இணைப்பு... வளம் காணப்போகும் திருநெல்வேலி, தூத்துக்குடி..
"வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்"
போகிற போக்கில் நதிநீர் இணைப்பைப் பற்றி மகாகவி பாரதி பாடிய பாடலை நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது அத்தனை எளிதல்ல. அவர் தேசிய அளவில் கண்ட கனவை மாநில அளவில் நடைமுறைப்படுத்தவே 16 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆம், தமிழ்நாட்டின் முதல் நதிநீர் இணைப்புத் திட்டம் என்றால் அது தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு... இந்த திட்டம் எப்படி உருவானது? இதற்கான தேவை என்ன? நடைமுறை சிக்கல்கள் என்ன? இதனால் உண்டாகப்போகும் பலன்கள் என்ன? பார்ப்போம் வாருங்கள்..
தமிழ்நாட்டின் ஒரே வற்றாத ஜீவநதி தாமிரபரணி. மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவுகளில் உற்பத்தியாகி, வடக்கு நோக்கி பயணித்து, கிழக்கில் திரும்பி நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களில் 128 கிலோ மீட்டர் ஓடி பழையகாயல் என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. இந்தியாவின் பிற ஜீவநதிகள் எல்லாம் இமயமலையின் பனிப்பாறைகளில் உருவாகிறது என்றால், மேற்குத்தொடர்ச்சி மலையின் புற்களில் சேமிக்கப்பட்ட மழைநீரில் இருந்து உருவாகிறது தாமிரபரணி. தண்பொருநை என்று இலக்கியத்தில் அழைக்கப்பட்டு, தாமிரபரணி என தற்காலத்தில் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: மதக்கலவரத்தை தூண்ட முயற்சி.. எச்.ராஜாவை ஸ்கெட்ச் போட்டு தூக்க தயாராகும் காவல்துறை!
தன் பயணத்தில் கோரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனாநதி, பச்சையாறு, சித்தாறு, ராமநதி ஆகிய 6 சிற்றாறுகளை துணைக்கு சேர்த்துக் கொள்கிறது. கொடிமேலழகன், நதியுண்ணி, கன்னடியன், அரியநாயகிபுரம், பழவூர், சுத்தமல்லி, மருதூர் ஆகிய 7 அணைகள் உள்ளன. கூடவே 8 கால்வாய்களும் உள்ளன. ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழையின்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வாடிக்கை. கிட்டத்தட்ட 14 டிஎம்சி அதாவது 13,800 மில்லியன் கனஅடி உபரிநீர் கடலில் கலக்கிறது. இதில் குறிப்பிட்ட அளவை தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்தினால் வேளாண்பரப்பு அதிகரிக்கும், வெள்ளத்தால் உண்டாகும் பாதிப்பும் குறையும் என திட்டமிடப்பட்டது.
2009-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் திட்டத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. அதாவது கடலில் உபரியாக கலக்கும் வெள்ளை நீரில் வினாடிக்கு 3200 கன அடி வீதம் 10 நாட்களுக்கு 2,765 மில்லியன் கன அடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாருடன் நதிகளுடன் இணைப்பதே தாமிரபரணி கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ள நீர் கால்வாய் திட்டம் ஆகும்.
தெளிவாக சொல்வதென்றால் தாமிரபரணியின் 3-வது அணைக்கட்டான கன்னடியன் கால்வாயை அகலப்படுத்துவது முதல்பணி. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் எம்.எல்.தேரி வரை வெள்ளநீர் கால்வாய் வெட்டப்பட்டது. நெல்லையில் 67 கி.மீ.நீளத்திற்கும், தூத்துக்குடியில் 8 கி.மீ.நீளத்திற்கும் என மொத்தம் 75.2 கி.மீ நீளத்திற்கு வெள்ளநீர் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. இடையில் சாத்தான்குளம் வட்டம் சுப்பராயபுரத்தில் 2 டிஎம்சி நீரை தேக்கி வைக்கும் அளவுக்கு 2 சிற்றணைகள் கட்டப்பட்டுள்ளன.
இடையில் 10 ஆண்டுகள் இந்த நதிநீர் இணைப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், மு.கஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சூடுபிடித்தது. பணிகள் முடிந்துள்ள நிலையில் இன்று இத்திட்டம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இடையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது பரிட்சார்த்த முறையில் இந்த வெள்ளநீர் கால்வாயில் நீர் திறந்து விடப்பட்டது. கிட்டத்தட்ட 176 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டு காரியாண்டி திருப்பணைக்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து கருமேனியாறு, எம்எல் தேரி, இடையன்குடி குளம், ஆயங்குளம் படுகை, விஜயநாராயணன் குளம், நம்பியாறு ஆகிய இடங்களுக்கு சென்று சேர்ந்தது.
369 கோடியில் திட்டமிடப்பட்டு 1061 கோடி ரூபாயில் இந்த நதிநீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக 17 ஆயிரம் ஹெக்டேர் பாசனப்பரப்பு உருவாகும் என்றும் மொத்தமாக 23 ஆயிரம் ஹெக்டேர் பாசனப்பரப்பு பயன்பெறும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நெல்லையில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளும் பலன்பெறும். குறிப்பாக சொல்வதென்றால், நெல்லையில் 32 கிராமங்கள் 177 குளங்கள்.. தூத்துக்குடியில் 18 கிராமங்கள், 75 குளங்கள் நீராதாரம் பெறும் சூழல் உருவாகி உள்ளது.
வறண்ட நிலப்பரப்பையே கண்டுவந்த இப்பகுதி மக்கள் நூற்றாண்டு கனவுத் திட்டம் நிறைவேறி இருப்பதன் மூலம் இன்னும் சில பத்தாண்டுகளில் பசுமை பூமியாக இது மாறுவதை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: 'ஆன்மீகத்தின் முதல் எதிரி… திமுக அரசே தெளிவுபடுத்து...' திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பொங்கியெழுந்த எம்.பி.,சு.வெங்கடேசன்