"தவிக்கும் பட்டாசு தொழிலாளர்கள்"..! தவெக அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..! தங்கம் தென்னரசு அறிவிப்பு.!!
தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் சிறிய பட்டாசு ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் வரும் 16ஆம் தேதி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு உற்பத்தித் தொழில் நீண்ட காலமாக முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்தத் தொழில்தான் மாவட்டத்தின் பொருளாதார அச்சாணியாகவும், நாட்டின் மொத்தப் பட்டாசுத் தேவையில் பெரும்பகுதியைப் பூர்த்தி செய்யும் மையமாகவும் திகழ்கிறது. ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் இந்தத் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.
குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.சமீப காலமாக பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சட்டவிரோத ஆலைகள் தொடர்பாக அதிகாரிகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வுகளின் விளைவாக நூற்றுக்கணக்கான சிறிய பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திடீரென வேலை இழந்துள்ளனர். பல குடும்பங்கள் அன்றாட உணவுக்கே வழியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை ஏரியில் ரூ.8 கோடி மண் கொள்ளை? முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் மீது அதிரடி புகார்!
சில பெண் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி அரசின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளனர்.இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், உரிமம் பெற்று சட்டப்பூர்வமாக இயங்கும் ஆலைகள் மற்றும் விற்பனையகங்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தி ஆய்வு என்ற பெயரில் அச்சுறுத்துவது நியாயமல்ல எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமானவர்கள் மீதும் பாதுகாப்பு விதிகளை மீறுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றாலும், முறையான உரிமத்துடன் செயல்படும் தொழில்களை முடக்கக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். தீபாவளி காலம் நெருங்கி வரும் இந்த நேரத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்படுவதால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!