தஞ்சையில் ஏப். 27 உள்ளூர் விடுமுறை! பெரிய கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஆட்சியர் அறிவிப்பு!
ஏப்.27-ல் தஞ்சையில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் சித்திரை பெருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 27-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்டுள்ளார்.
தஞ்சை பெருவுடையார் கோயில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தஞ்சை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், மே மாதம் ஒரு சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்ரல் 27-ஆம் தேதி அதிகாலை 6 மணி அளவில் தேரோட்டம் தொடங்கவுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டத் தேரில் பெருவுடையாரும், பெரியநாயகியும் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இந்தத் தேரோட்டத்தைக் காணத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை! சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தேரோடும் வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தீயணைப்புத் துறை மற்றும் மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், தற்காலிகக் கழிப்பறை வசதிகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்களைத் தஞ்சை மாநகராட்சி மற்றும் மாவட்டக் காவல்துறை ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன.
தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம் என்பது ஒரு ஆன்மீக நிகழ்வு மட்டுமல்லாது, தஞ்சையின் பண்பாட்டு அடையாளமாகவும் திகழ்வதால், இந்த விடுமுறை அறிவிப்பு மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: கேரளாவின் திரிச்சூர் பூரம் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து! 13 பேர் உயிரிழப்பு!