“மகளிர் உரிமைத் தொகை வழங்கியது முதலமைச்சரின் ராஜதந்திர நடவடிக்கை!” சிதம்பரத்தில் தொல். திருமாவளவன் புகழாரம்!
மகளிர் உரிமைத் தொகையாக ₹5,000 வழங்கிய முதலமைச்சரின் செயல், சங்பரிவார் அமைப்புகளின் முட்டுக்கட்டைச் சதியை முறியடித்த 'ராஜதந்திர நடவடிக்கை' எனத் தொல். திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகையாக ₹5,000 வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கை, சங்பரிவார் கும்பலின் சதியை முறியடித்த ஒரு 'ராஜதந்திர நடவடிக்கை' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகையை வழங்கக்கூடாது எனச் சதி செய்து உச்சநீதிமன்றத்தை அணுகியவர்களின் திட்டத்தை முறியடிக்கும் வகையில், 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் ₹5,000 செலுத்திய முதலமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது. இது பெண்களின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட தொலைநோக்கு நடவடிக்கை. எதிர்க்கட்சிகளின் விமர்சனம் இதில் எடுபடாது.
சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி இன்னும் வடிவம் பெறவில்லை எனச் சுட்டிக்காட்டினார். அதிமுக தலைமையிலான கூட்டணி சிதறிக் கிடக்கிறது. அவற்றை ஒன்று சேர்ப்பதற்கே அவர்கள் போராடுகிறார்கள். எதார்த்தத்தில் திமுக கூட்டணியை எதிர்ப்பதற்கு இன்னும் ஒரு தகுதியான கூட்டணியே அமையவில்லை.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கடும் சாடல்!
விசிக-வைப் பொறுத்தவரை வலதுசாரி அரசியல் இந்த மண்ணில் வலுப்பெறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. கூட்டணிக்குள் சிறு முரண்பாடுகள் இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்படும். வரும் 22-ஆம் தேதி முதல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என நம்புகிறேன்.
பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள் குறித்து முதலமைச்சருக்குத் திருமாவளவன் கோரிக்கைகளை முன்வைத்தார். ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தமிழக அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். மதுக்கடைகளை மூடுவது எங்களின் கொள்கை என்றாலும், பணியாற்றும் ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்ட நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்குரியத் தொகை வழங்கப்படவில்லை என்ற குறை உள்ளது. அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.
நாடாளுமன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர்களைப் பேசவிடாமல் தடுக்கும் பாஜக அரசைக் கண்டித்து, மக்களவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 100-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும், மார்ச் 9-ல் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் முற்றும் மோதல்! செல்வப்பெருந்தகையை மிகக் கடுமையாக சாடிய விசிக வன்னி அரசு!