திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்!! மலை அளவிடும் பணி துவக்கம்! ஆக்ஷனில் இறங்கியது தொல்லியல்துறை!
திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணியை மத்திய தொல்லியல் துறையினர் மற்றும் வருவாய் அலுவலர்கள் துவக்கினர்.
மதுரை: திருப்பரங்குன்றம் மலையை முழுமையாக அளவிடும் பணியை மத்திய தொல்லியல் துறை (ASI) அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று தொடங்கினர். இந்த அளவீட்டுப் பணி வரும் மூன்று நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தை அடுத்து, ஹிந்து தர்ம பரிஷத் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மலையில் உள்ள பழமையான சமண கோயில்கள், தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடைவரைக் கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களைப் பாதுகாக்கவும், மொத்த மலையையும் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எஸ். ஸ்ரீமதி அமர்வு, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளுடன் இணைந்து வருவாய்த் துறை அதிகாரிகள் மலையை அளவிட வேண்டும் என்றும், மே 31-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அளவீட்டுப் பணி தொடங்கியது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!
வருவாய்த் துறையினர் அதிநவீன டிஜிபிஎஸ் (GPS) கருவிகளைப் பயன்படுத்தி மலையை அளவிடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பழனி ஆண்டவர் மலைப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது. போலீஸ் பாதுகாப்புடன் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த அளவீட்டுப் பணியின் முடிவுகளின் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். இந்த அறிக்கை வரும் நாட்களில் மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு சமர்ப்பிக்கப்படும்.
திருப்பரங்குன்றம் மலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு பழங்கால சமணர் குடைவரைக் கோயில்கள், இந்து கோயில்கள் உள்ளிட்ட பல புராதன அமைப்புகள் உள்ளன. இந்த மலையை மத்திய தொல்லியல் துறையின் கீழ் கொண்டு வருவது பாதுகாப்புக்கு உதவும் என பக்தர்கள் மற்றும் அமைப்புகள் நம்புகின்றனர்.
இந்த அளவீட்டுப் பணி முடிவடைந்த பிறகு, மலையின் எதிர்கால நிர்வாகம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை திருப்பரங்குன்றம் மலையின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தவெக ஆட்சியிலும் ஓயாத திருப்பரங்குன்றம் பிரச்னை! சிக்கலில் அமைச்சர் நிர்மல் குமார்! நடைதிறப்பில் மாற்றம்?!