×
 

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு இடைக்கால தடை!

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றத் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் காட்டி அதிகாரிகள் தீபம் ஏற்றத் தடை விதித்தனர்.

நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த அவமதிப்பு நடவடிக்கையை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் - ஜோதிராமன் அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த அவமதிப்பு நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த வழக்கை வரும் ஏப்ரல் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ஐந்து பேருக்கு அனுமதி அளித்தால் வழக்கு முடிப்பு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிரடி!

கோயில் நிர்வாகமே (தேவஸ்தானம்) தீபத்தூணில் முறையாகப் பூஜைகளைச் செய்து தீபம் ஏற்றுவதன் மூலம் இத்தகைய தேவையற்ற சர்ச்சைகளையும் சட்டப் சிக்கல்களையும் தவிர்க்கலாமே என்று நீதிபதிகள் தங்களது கருத்தைப் பதிவு செய்தனர்.

தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் நாளை (மார்ச் 18) இந்த அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அதற்குத் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு! தீபத்தூண் சர்ச்சைக்கு பின் மதுரைக்கு வருகை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share