×
 

தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு! உப்பளங்களில் கருப்புக்கொடி ஏந்தி தொழிலாளர்கள் போராட்டம்!

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பள தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி அருகே பல்லாயிரக்கணக்கான உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்தை அடியோடு சீரழிக்கும் வகையில் அமையவுள்ள பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளத் திட்டத்தை உடனடியாக மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, முள்ளக்காடு கோவளம் பகுதியில் நூற்றுக்கணக்கான சிறு உப்பு உற்பத்தியாளர்களும் பெண் தொழிலாளர்களும் உப்பளப் பாத்திகளில் இறங்கி கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் தென் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகேயுள்ள முள்ளக்காடு, கோவளம், புள்ளாவெளி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறு உப்பு உற்பத்தியாளர்கள் தங்களது சொந்த முதலீட்டில் உணவுக்கான உப்பு உற்பத்தியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த உப்பளத் தொழிலை மட்டுமே நம்பி சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் தினக்கூலிகளாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், அதனை ஒட்டியுள்ள கோவளம் கடற்கரைப் பகுதியில் ஆயிரக்கணக்கான பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு தங்களது குடும்பங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில், முள்ளக்காடு, கோவளம் மற்றும் புள்ளாவெளி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய மற்றும் உப்பள நிலங்களை தமிழ்நாடு அரசு சிப்காட் (SIPCOT) நிறுவனம் மூலம் கையகப்படுத்தி, அங்கு பிரம்மாண்ட சர்வதேசக் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காகத் தென் கொரிய நாட்டின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. 

இதையும் படிங்க: தூத்துக்குடி ‘துப்பாக்கி செல்வம்’ வெட்டிக்கொலை! தோட்டத்தில் நடந்த பயங்கரம்... போலீஸ் தீவிர விசாரணை

பல்லாயிரக்கணக்கான உழைக்கும் எளிய மக்களின் வாழ்வாதாரமான உப்பளத் தொழிலையும், கடற்கரையை நம்பியிருக்கும் பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும் அடியோடு அழித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு நிலங்களைத் தாரைவார்ப்பதை எதிர்த்து கோவளம், பசுவந்தனை பகுதிச் சிறு உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், வியாபாரிகள், மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து தொடர் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக இக்கடலோரப் பகுதியிலிருந்து கப்பல் கட்டும் தளத் திட்டத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெற்று, அதனை மக்கள் வசிக்காத மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். அரசு தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காவிட்டால், ஒட்டுமொத்த மக்களையும் திரட்டி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் ஏற்கனவே பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி இன்று காலை கோவளம் பகுதியில் நூற்றுக்கணக்கான சிறு உப்பு உற்பத்தியாளர்களும், தாய்மார்கள் உள்ளிட்ட ஆண், பெண் உப்பளத் தொழிலாளர்களும் உப்பளப் பாத்திகளில் வரிசையாக இறங்கி நின்று, கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி வானதிர முழக்கங்களை எழுப்பினர். மத்திய, மாநில அரசுகள் எங்களின் வயிற்றிலடிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். 

தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டம் மாற்று இடத்திற்கு மாற்றப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்; அவ்வாறு வெளியிடத் தவறினால் அடுத்தகட்டமாகத் தலைநகர் சென்னையை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று கண்ணீர் மல்கக் கொந்தளிப்புடன் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: தூத்துக்குடி மரக்கடை தொழிலாளி கொடூரக் கொலை! மனைவி உள்பட 3 பேர் கைது! விசாரணையில் பகீர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share