தூத்துக்குடியில் அதிர்ச்சி! திருநங்கையை கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு; 2 சிறுவர்கள் கைது
சிறுவர்கள், தங்களிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவின் வயிறு மற்றும் இடது முழங்கை பகுதியில் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு இருவரும் பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி: புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே திருநங்கையை கத்தியால் சரமாரியாக குத்தி, செல்போனை பறித்துச் சென்றதாக கூறப்படும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். காயமடைந்த திருநங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி சிலுவைபட்டி பகுதியைச் சேர்ந்த திருநங்கை சித்ரா (47), புதூர்பாண்டியபுரம் டோல்கேட் அருகே உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று உணவகம் அருகே அவர் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 சிறுவர்கள் அவரிடம் செல்போனை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால் சித்ரா செல்போனை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள், தங்களிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ராவின் வயிறு மற்றும் இடது முழங்கை பகுதியில் குத்தியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு இருவரும் பைக்கில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி மெகா முதலீடு... 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு; தூத்துக்குடியில் உருவாகும் பிரம்மாண்ட கனிம ஆலை!
கத்திக்குத்தில் காயமடைந்த சித்ரா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், பறிக்கப்பட்ட செல்போனின் டவர் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது செல்போன் சிக்னல் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பின்னர் மேலக்கரந்தை பகுதியில் பதுங்கியிருந்ததாக கூறப்படும் 2 சிறுவர்களையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கையை கத்தியால் தாக்கி செல்போன் பறித்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நெல்லையில் ஒரே நாளில் 4 பேர் மீது குண்டர் சட்டம்! கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் போலீஸ் அதிரடி