1500 மிரட்டல்.. 100-க்கும் மேற்பட்ட வழக்கு; நெல்லை பொறியாளர் சென்னையில் கைது - செய்தது என்ன?
அமெரிக்காவில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் சரத் சுப்பிரமணியன் சங்கர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் 2023 முதல் 2025 வரை விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் பிரமுகர்கள், மூத்த காவல் அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு 1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியதாகக் கூறப்படும் வழக்கில், அமெரிக்காவில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் சரத் சுப்பிரமணியன் சங்கர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் சரத் சுப்பிரமணியன் சங்கர், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர். அவர் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
விமானம் மூலம் சென்னை வந்த அவரை, குடியுரிமை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சரத் சுப்பிரமணியன் சங்கருக்கு எதிராக ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை தமிழ்நாடு பயங்கரவாதத் தடுப்புப் படை (ATS) அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: 4-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்... NEET விவகாரத்தில் கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்; CJP போராட்டம் தீவிரம்!
விமான நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், அரசியல் தலைவர்கள், மூத்த காவல் அதிகாரிகள், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, தமிழ்நாடு முழுவதும் சரத் சுப்பிரமணியன் சங்கர் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த மின்னஞ்சல்களின் காரணமாக ஒவ்வொரு முறையும் விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வெடிகுண்டு நிபுணர் குழுக்கள் தீவிர சோதனை மேற்கொண்டன. பின்னர், அந்த மிரட்டல்கள் அனைத்தும் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டது.
தனது அடையாளத்தை மறைப்பதற்காக, விபிஎன் (VPN) மற்றும் டார்க் வெப் (Dark Web) வசதிகளைப் பயன்படுத்தி, வெளிநாட்டு சர்வர்கள் வழியாக சரத் சுப்பிரமணியன் சங்கர் மின்னஞ்சல்களை அனுப்பி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு நடத்திய விசாரணையின்போது, தவறுதலாக தனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து பதில் அனுப்பியதன் மூலம் அவரது அடையாளம் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, சுமார் ஆறு மாதங்கள் அவரது நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
சென்னை வந்தவுடன் கைது செய்யப்பட்ட சரத் சுப்பிரமணியன் சங்கர், கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எதற்காக அவர் இந்த போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பினார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்தவரே பிரதமர் மோடி தான்..!! ராகுல் காந்தி விளாசல்..!!