குடமுழுக்கிற்கு தயாராகும் திருச்செந்தூர் முருகன் கோவில்.. கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு..!
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்தது. ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.
இதையும் படிங்க: செந்தில்நாதனுக்கு செந்தமிழில் குடமுழுக்கு.. கோவில் நிர்வாகம் சொன்ன சூப்பர் அறிவிப்பு..!
பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனை ஒட்டி கடந்த மே 18ம் தேதி காலை ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவானது அறநிலையத்துறை ஆகம வல்லுநர் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், தூத்துக்குடி செல்வம் பட்டர் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் பூமி பூஜை செய்தனர்.
மேலும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
நேற்று காலையில் கோவில் முதல் பிரகாரத்தில் உள்ள வல்லப விநாயகர் சன்னதி முன்பு கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில் யாகவேள்வி, பிரம்மச்சாரி வழிபாடு, கஜபூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்ய, பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில், அஷ்டதிக் பாலகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, வேள்வி பூஜை நடந்தது.
இதனையடுத்து வரும் 1-ந் தேதி யாகசாலை பூஜை தொடங்கவுள்ள நிலையில், நேற்று மாலை ஆட்சியர் இளம்பகவத் திருச்செந்தூருக்கு சென்று கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் பணிகளை கனிமொழி எம்.பி. இன்று ஆய்வு செய்தார். வாகன நிறுத்துமிடங்கள், பொதுமக்கள் நடைபாதைக்காக அமைக்கப்பட்ட மரப்பாலம் உள்ளிட்டவற்றை கனிமொழி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் உள்ளிட்டோரும் உடனிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: சொடக்கு போடும் நேரத்தில் பனைமர உச்சிக்கு சென்ற சீமான்.. 'கள்' இறக்கி.. தொண்டர்களுக்கு ஊற்றி கொடுத்து உற்சாகம்!!