திருச்செந்தூர் குடமுழுக்கு விழா: அனைத்திலும் தமிழ் மொழியே.. ஐகோர்ட் மதுரைக்கிளை உறுதி..!
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா அனைத்திலும் தமிழ் மொழி இருக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்துள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, வரும் ஜூலை மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்தது. ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..! திருச்செந்தூர் முருகன் கோயிலில் இத்தனை கோடி காணிக்கை வசூலா..!!
பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் ஜூலை 7ஆம் தேதி மகா கும்பாபிஷேக குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனை ஒட்டி கடந்த மே 18ம் தேதி காலை ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவானது அறநிலையத்துறை ஆகம வல்லுநர் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், தூத்துக்குடி செல்வம் பட்டர் மற்றும் திருச்செந்தூர் சிவாச்சாரியார்கள் பூமி பூஜை செய்தனர்.
மேலும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலில் யாகசாலை பூஜை வரும் ஜூலை 1ல் தொடங்க உள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு தமிழில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் ஏற்கனவே அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி காலை 6.15 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதில் வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுர இன்னிசை ஆகியவை நடைபெறும் எனவும், பன்னிரு திருமுறைகள் திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேள்விச்சாலை வழிபாடு நாட்களில், வேதபாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை நடைபெறும். காலை 7 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை, 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்" என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்த உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி அனைத்திலும் தமிழ் மொழி இருக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்துள்ளது. மேலும் திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை என அனைத்திலும் தமிழ் மொழி இருக்கும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
இதையும் படிங்க: 'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்..! திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த சீமான்..!