×
 

விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்.. திருச்செந்தூர் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கடலலையாய் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பின் சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு, ஜூலை மாதம் 7ம் தேதியான இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.

சுமார் 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று முடிந்த நிலையில், ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.

இதையும் படிங்க: விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்.. களைகட்டும் யாக சாலை பூஜை..!

திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த மே 18ம் தேதி காலை ராஜகோபுரம் முன் பகுதியில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 1ம் தேதி யாக சாலை பூஜை கோலாகலமாக தொடங்கியது. மூலவர், பார்வதி அம்பாள், கரியமாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் காலை மற்றும் மாலையில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று காலை 10-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 11-ம் கால யாகசாலை பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. 

விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை 6.15 மணிக்கு தமிழில் வேத மந்திரங்கள் ஓத, கும்பாபிஷேகம் தொடங்கியது. ஒரே நேரத்தில் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கும், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் என அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஆன்மீக குருமார்கள், திருவாவடுதுறை, தருமபுரம் ஆதினகர்த்தர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா, அரோகரா என கோஷத்தை எழுப்பி குடமுழுக்கை கண்டு களித்தனர். மேலும் டிரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 

குடமுழுக்கை காண பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்தால் நெரிசல் ஏற்படும் என்பதால், ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெரிசல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: நாளை தொடங்குகிறது யாக சாலை பூஜை..! பக்தர்களுக்காக இவ்ளோ ஏற்பாடா!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share