×
 

தொடரும் போர் பதற்றம்..!! துபாயில் திருப்பூர் ஆடைகள் தேக்கம்..!! வர்த்தகத்தில் பெரும் அதிர்வு..!!

போர் பதற்றம் காரணமாக துபாயில் திருப்பூர் ஆடைகள் தேங்கி கிடைப்பதால் பொருளாதார இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கிய பெருமளவிலான வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது ஈரானின் 36 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து ஈரான் கடும் பதிலடி தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. 

குறிப்பாக அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (துபாய் உட்பட), கத்தார், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் பிராந்தியத்தில் பதற்றம் உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த மோதல் காரணமாக உலகின் மிக முக்கியமான கடல் வழிப் போக்குவரத்துப் பாதைகளான ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாப்-எல்-மண்டேப் ஜலசந்தி ஆகியவற்றில் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்து நடைபெறுகிறது. ஈரானின் எச்சரிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் காரணமாக இந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட நின்றுவிட்டது. பல கப்பல்கள் ஜலசந்திக்கு வெளியே நங்கூரமிட்டு காத்திருக்கின்றன. அதேபோல் சிவப்புக் கடல் வழியாக செல்லும் பாதையும் பாதுகாப்பின்மை காரணமாக தவிர்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஷாக் மேல ஷாக்..!! மத்திய கிழக்கில் போர் பதற்றம்.. தலைகீழாக மாறிய இந்திய பங்குச்சந்தை..!!

முன்னணி கப்பல் நிறுவனங்களான மெர்ஸ்க், எம்.எஸ்.சி. (மெடிடெரேனியன் ஷிப்பிங் கம்பெனி), ஹபாக்-லாய்ட் போன்றவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. சூயஸ் கால்வாய் வழியாக செல்வதற்குப் பதிலாக ஆப்பிரிக்காவை சுற்றி கேப் ஆஃப் குட் ஹோப் வழியாக கப்பல்கள் திருப்பிவிடப்படுகின்றன. இதனால் ஒரு பயணத்திற்கு 15 முதல் 20 நாட்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இது சரக்கு போக்குவரத்து செலவை கணிசமாக உயர்த்தியுள்ளது.

கப்பல் நிறுவனங்கள் போர்க்கால கூடுதல் கட்டணம் (war risk surcharge) வசூலிக்கத் தொடங்கியுள்ளன. ஒரு கண்டெய்னருக்கு இந்திய மதிப்பில் ரூ.1.3 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. இது மொத்த போக்குவரத்து செலவில் 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரிப்பாக அமைகிறது. வான்வழி போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான், இஸ்ரேல், லெபனான், ஈராக், ஜோர்டான் ஆகிய நாடுகளின் வான்வெளி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பா, அமெரிக்கா செல்லும் இந்திய விமானங்கள் நீண்ட மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ, எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் வளைகுடா நாடுகளுக்கான பல விமானங்களை ரத்து செய்துள்ளன. துபாய், தோஹா போன்ற முக்கிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் செயல்பாடுகள் குறைந்துள்ளதால், அங்கு தேங்கியுள்ள சரக்குகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான சரக்குகள் துபாய் வழியாக மறு ஏற்றுமதி செய்யப்படுவதால், அங்கு ஏற்பட்டுள்ள பதற்றம் நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறுகையில், “போர் சூழல் காரணமாக நீர்வழி போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் சரக்கு ஏற்றுமதி கடுமையான சிக்கலை சந்திக்கிறது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், இது பெரும் பொருளாதார இழப்பையும் வேலைவாய்ப்பு பாதிப்பையும் ஏற்படுத்தும். போர் இல்லாத உலகமே வேண்டும்” என்றார்.

பின்னலாடை துறை மட்டுமின்றி விவசாய பொருட்கள் ஏற்றுமதியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. துபாய் இந்திய ஏற்றுமதியின் மையமாக இருப்பதால், அங்கு சரக்குகள் தேங்கும் அபாயம் அதிகம். அடுத்த சில வாரங்களில் பாதிப்பின் முழு அளவு தெரியவரும். இழப்புகளை குறைக்க இந்திய அரசு அவசர ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. 

ஏற்றுமதியாளர்களுக்கு புதிய ஒப்பந்தங்களை FOB (Free On Board) அடிப்படையில் மட்டுமே செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொறுப்பு வாங்குபவருக்கு மாற்றப்படுகிறது. இந்தப் போர் நீடித்தால் உலகப் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
 

இதையும் படிங்க: பழிக்குப்பழி..! இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்? குறி வைத்த ஈரான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share