தலைக்கேறிய மதுபோதை! வீடுபுகுந்து பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!
வெள்ளியூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ளூர், வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே உள்ள வெள்ளியூர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கு தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புரோசெங்கி டோஸ் (35) என்பவர் தனது மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து பேருடன் வேலை தேடி திருவள்ளூருக்கு வந்திருந்தார். அவர்கள் அனைவரும் வெள்ளியூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பணியில் சேர திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவத்திற்கு முந்தைய இரவு புரோசெங்கி டோஸ் தனது நண்பர்களுடன் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் போதையில் அங்கிருந்து வெளியேறிய அவர் அருகிலுள்ள ஆர்.ஆர்.கண்டிகை கிராமத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு ஒரு வீட்டிற்குள் நுழைந்து பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் பட்டாசு தயாரிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து! உடல்சிதறி ஒருவர் பலியான சோகம்!
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டதாகவும், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்கள் வந்ததும் அங்கிருந்து செல்லாமல், மேலும் சில வீடுகளுக்குள் நுழைந்து பெண்களிடம் அத்துமீற முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தட்டிக்கேட்ட பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், சிலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த புரோசெங்கி டோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் ஆத்திரம் மற்றும் இளைஞரின் உயிரிழப்பு ஆகியவை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சம்பவத்தின் முழு பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த கோயில் நிதி!! பாதுகாப்பாக இருக்கும் என ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்!