பிரதமரை "தீவிரவாதி" என்பதா..? காங்கிரசாருக்கு நாவடக்கம் தேவை..! தமிழக பாஜக கண்டனம்..!!
பிரதமர் குறித்து கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
கண்ணியம் தவறும் காங்கிரஸாருக்கு நாவடக்கம் தேவை என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பாரத மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியை “தீவிரவாதி” எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளது. தோல்வி பயத்தில் கண்மூடித்தனமாக உளறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வார்த்தையை அளந்து பேச வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
காலங்காலமாகத் தாய்த் திருநாட்டின் அத்தனை வளங்களையும், செல்வங்களையும், வெகுமதிகளையும் அனுபவித்துக் கொண்டு, விசுவாசத்தை மட்டும் வெளிநாடுகளுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த காங்கிரஸ்-க்கு, தனது வாழ்நாளையே மக்கள் பணிக்காக அர்ப்பணித்த எங்கள் பிரதமரின் நிழலை நோக்கி விரல் உயர்த்தக் கூட தகுதியில்லை என்று சாடியுள்ளது.
நேர்மையான முறையில் தார்மீக ரீதியாகவும் கொள்கை வழியாகவும் எங்கள் பிரதமரை எதிர்க்கும் திராணியற்ற காங்கிரஸ், இதுபோன்ற விஷம் தோய்ந்த வார்த்தைகளை ஏவி வன்மத்தை வடித்துக் கொள்வது அருவருப்பானது. ஆழிப் பேரலையை நோக்கி, கூழாங்கற்களை எறிவது போலானது. எனவே, துளியும் அரசியல் நாகரிகமற்ற தனது கருத்துக்கு திரு. மல்லிகார்ஜுன கார்கே உடனடியாகப் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இறுதிக்கட்டத்தை எட்டிய தேர்தல் பரப்புரைகள்..! காரைக்குடியில் சீமான் அனல் பிரச்சாரம்..!
இல்லையேல், தமிழக பாஜக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் தமிழகத்தில் சுவடு தெரியாமல் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின்..! இறுதி கட்ட பரப்புரை தீவிரம்..!