#TN Election Results 2026: ஸ்டாலின், உதயநிதி முதல் சுற்றில் பின்னடைவு! அதிரும் அரசியல் களம்!
தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் முதல் சுற்று இயந்திர வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பகட்ட முடிவுகள் மாநிலத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளன. திமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் கொளத்தூர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிகளில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் முதல் சுற்று முடிவில் பின்னடைவைச் சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. அதில் இருவரும் தங்களது செல்வாக்கை நிலைநாட்டி முன்னிலை பெற்றனர். இருப்பினும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டபோது நிலைமை மாறியுள்ளது.
கொளத்தூர் தொகுதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், முதல் சுற்று இயந்திர வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் பின்தங்கியுள்ளார்.
இதையும் படிங்க: #TNElectionResults2026: ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு பின்னடைவு: தவெக வேட்பாளர் கிறிஸ்டோபர் முன்னிலை!
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தபால் ஓட்டுகளில் முன்னிலை வகித்த நிலையில், முதல் சுற்று முடிவில் தற்போது பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
திமுகவின் மிக முக்கியமான இரண்டு தலைவர்களுமே ஆரம்பகட்டச் சுற்றில் பின்னடைவைச் சந்தித்து வருவது அக்கட்சியினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், முதலமைச்சரின் இந்த நிலவரம் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நோக்கிச் செல்வதைக் காட்டுகிறது.
இருப்பினும், இது முதல் சுற்று முடிவுகள் மட்டுமே என்பதால், இன்னும் பல சுற்றுகள் எஞ்சியுள்ளன. அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த நிலவரம் மாறுமா அல்லது இதே நிலை நீடிக்குமா என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
இதையும் படிங்க: தென்னிந்தியாவின் குரலை ஒடுக்க சூழ்ச்சி! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ரேவந்த் ரெட்டி எழுதிய பரபரப்பு கடிதம்!