×
 

சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... பெரும் தலைவலியாக மாறிய `பவர் கட்’ ... மின்வாரியம் எடுத்த அதிரடி முடிவு...!

சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட மின்தடை குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாமல், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மின்வாரியம் அவ்வப்போது விளக்கங்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. இந்த மின்தடைக்கான காரணங்கள் மற்றும் அதை சரிசெய்ய மின்வாரியம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட மின்தடைக்கு, அதிக மின் சுமை காரணமாக துணை மின் நிலையங்களில் உள்ள மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டதே காரணம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் இருக்குற ஏரியாவுலேயே இப்படியா?... பிள்ளை குட்டிகளோடு நடுத்தெருவுக்கு வந்த மக்கள்... பரபரப்பான இசிஆர்...!

மேலும், மின்தடையை சமாளித்து சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை துணை மின் நிலையங்களில் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் இடங்களில் உடனடி நடவடிக்கை எடுத்து, சீரான மின்சார விநியோகத்தை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரியம் கூறியுள்ளது.

குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் நேற்று இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில் மின்மாற்றி பழுது காரணமாகவே மின்தடை ஏற்பட்டதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல், அரும்பாக்கம் பகுதியில் சென்னை மாநகராட்சியின் பணிகளின்போது மின்கம்பி சேதமடைந்ததால் மின்தடை ஏற்பட்டதாகவும், புதுப்பேட்டை பகுதியில் மின்மாற்றி கோளாறு காரணமாக மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகள் ஏற்பட்ட இடங்களில் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்குள் சீரான மின்சார விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மின்வாரியம் கூறியுள்ளது.

மின்தடை தொடர்பாக பொதுமக்கள் மின்னகம் மையத்திற்கு அளிக்கும் புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உடனடி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு இரவு பகலாக உத்தரவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் புகார்களை 24 மணி நேரமும் பெறும் வகையில், மூன்று வேளைப் பணி முறையில் மொத்தம் 95 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு பணிமுறையிலும் ஐந்து மேற்பார்வையாளர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்மாற்றி பழுதுகளால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரிசெய்யவும், தேவையான இடங்களில் புதிய மின்மாற்றிகளை பொருத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டபோது மின்னகம் மையத்தை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், தொடர்புகொண்ட போதிலும் அதிகாரிகள் அழைப்புகளை ஏற்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, இதுபோன்ற புகார்களை உடனுக்குடன் பதிவு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்கும் பணிகளை மின்வாரியம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்தடை பிரச்சினைகளை தீர்க்க, போதுமான பணியாளர்களை நியமித்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதும் பொதுமக்களின் வலியுறுத்தலாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க: விடிய, விடிய பவர் கட்... அறிவிக்கப்படாத மின்வெட்டால் அவதி... ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share