பாசி பிடித்த வாட்டர் கேன் விற்றால் ₹5000 அபராதம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக உணவு பாதுகாப்பு துறை குடிநீர் கேன்களின் தரம் குறித்து இன்று புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கேன் குடிநீரின் தேவையானது பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனைப் பயன்படுத்தித் தரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க, தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக, அசுத்தமான அல்லது பாசி பிடித்த கேன்களைப் பயன்படுத்தும் கடை உரிமையாளர்களுக்கு ₹5,000 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாசி பிடித்த, நிறம் மாறிய அல்லது அசுத்தமான கேன்களில் குடிநீர் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு உடனடி அபராதமாக ₹5,000 விதிக்கப்படும். மேலும், அந்த நீர் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, தரம் குறைவாக இருந்தால் ஆலைகளுக்குச் சீல் வைக்கப்படும்.
ஒரு பிளாஸ்டிக் குடிநீர் கேனை அதன் பயன்பாட்டுத் திறனைப் பொறுத்து அதிகபட்சமாக 30 முறை மட்டுமே மறுசுழற்சி (Recycle) செய்ய வேண்டும். அதற்கு மேல் தேய்மானம் அடைந்த கேன்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!
ஒவ்வொரு குடிநீர் கேனிலும் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள், FSSAI உரிமம் எண் ஆகியவை தெளிவாக இடம் பெற்றிருக்க வேண்டும். 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, தரம் மற்றும் பாதுகாப்புப் பரிசோதனைகள் கூடுதல் கடுமையாக்கப்பட்டுள்ளன.
குடிநீரில் மனித உடலுக்குத் தேவையான கால்சியம் (10 - 75 மி.கி/லிட்டர்) மற்றும் மெக்னீசியம் (5 - 30 மி.கி/லிட்டர்) ஆகிய தாதுக்கள் சரியான அளவில் இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
கேன் குடிநீரை நேரடியாகச் சூரிய ஒளி படும்படி கடைகளின் வாசலிலோ அல்லது திறந்தவெளி வாகனங்களிலோ தேக்கி வைக்கக் கூடாது. சூரிய வெப்பத்தால் பிளாஸ்டிக் கேன்களில் ரசாயன மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் தினமும் 12 லட்சம் கேன்கள் நுகரப்படும் சூழலில், உரிமம் இன்றிச் செயல்படும் போலி நிறுவனங்களைக் கண்டறிய மண்டல வாரியாகச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்குக் கிடைக்கும் குடிநீர் கேன்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், உணவுப் பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் எண்ணிற்குப் புகார் அளிக்கலாம்.
இதையும் படிங்க: பாட்டிலில் பெட்ரோல் வாங்க தடை! பதுக்கலை தடுக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!