×
 

"எ.வ.வேலுக்கு சிக்கல்! சாலை முறைகேடு வழக்கில் புதிய திருப்பம்... சுப்ரீம் கோர்ட்டை நாடும் தமிழக அரசு!"

தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் ஆஜரான தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், அவசர வழக்காக நாளையே விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்

தமிழ்நாட்டில் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால நிவாரணத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதுடன், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. மேலும், அவருக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கையும் லுக் அவுட் நோட்டீசையும் ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தார். மனு விசாரணையின் போது, அரசின் முன்அனுமதி இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருந்ததால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்றும் அவரது தரப்பு வாதிட்டது. மேலும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஜூலை 15ல் நேரில் ஆஜராகணும்!! முறைகேடு வழக்கில் எ.வ.வேலுக்கு சிக்கல்!

இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் சாலைப் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையிலும், 85 திட்டங்களுக்கு ரூ.195 கோடி வரை ஒப்பந்ததாரர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், சாலை அமைக்கப்படாமலேயே பெரும்பாலான தொகை வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், எ.வ.வேலு நாடு திரும்பிய பின்னர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் லுக் அவுட் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், ஜூலை 28 வரை அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அவசர விசாரணை கோரிக்கை முன்வைக்கப்பட்டாலும், அதை உடனடியாக ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதனால், எ.வ.வேலு வழக்கில் அடுத்தகட்ட சட்டநடவடிக்கைகள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: சம்மன் அனுப்பிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்!! விசாரணைக்கு வராத எ.வ.வேலு! அதிகரிக்கும் பரபரப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share