இதென்னடா வம்பா போச்சு! அமைச்சர்களின் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்!
தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மொபைல் எண்களை, வெளிப்படையாக அறிவித்ததை தொடர்ந்து, தினமும் ஏராளமான அழைப்புகள் வருகின்றன. இதையடுத்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம், புதிய எண்கள் வாங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை: தமிழக அரசு நிர்வாகத்தை முழு வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு வரும் நோக்கில் முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகளின் மொபைல் எண்களை அரசு சமீபத்தில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. ஆனால், இந்த நடவடிக்கை எதிர்பாராத பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான எண்களுக்கு தினமும் ஏராளமான அழைப்புகள் வருவதால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதிலேயே சிரமம் ஏற்பட்டுள்ளது. முக்கிய அலுவல் பேச்சுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, தமிழக அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து புதிய மொபைல் எண்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். உயர் அதிகாரிகள் தெரிவித்தபடி, புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசின் தேவைக்கேற்ப புதிய சிம் கார்டுகளை வழங்கி வருகிறோம். இந்தப் புதிய எண்கள் அனைத்தும் CUG (Closed User Group) அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுக்குள் தடையின்றி தொடர்பு கொள்ள முடியும்.
இதையும் படிங்க: #BREAKING: தவெக அரசின் அதிரடி மூவ்... தமிழகம் முழுவதும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!! முழு விவரம்..!!
முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தப் புதிய எண்கள் எக்காரணம் கொண்டும் பொதுமக்களுக்கு வெளியிடப்படாது. அரசு இணையதளம் உள்ளிட்ட எந்த இடத்திலும் இந்த எண்கள் பகிரப்படாது. முழுக்க முழுக்க அரசின் உள் நிர்வாகத் தொடர்புக்காக மட்டுமே இந்த எண்கள் பயன்படுத்தப்படும்.
முதலமைச்சர் விஜய்யின் வெளிப்படைத்தன்மை கொள்கையை நிலைநாட்டும் வகையில் பழைய எண்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில், அலுவல் ரீதியான தொடர்புகளுக்கு தனி எண்கள் என்ற இரட்டை முறைமை அமலுக்கு வருகிறது. இந்தப் புதிய ஏற்பாடு அரசு நிர்வாகத்தின் வேகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை பல மாநிலங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பி.எஸ்.என்.எல். மூலம் CUG சிம்களைப் பெறும் செயல்முறை விரைவில் முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கோயில்களை போல தியேட்டர்களில் உணவு பொருள் விலையை கண்காணிக்க வேண்டும்: இயக்குநர் பேரரசு கோரிக்கை!