×
 

காவிரி தண்ணீரை தர முடியாதா?... கர்நாடகாவிற்கு செக் வைக்கும் தமிழ்நாடு அரசு... காத்திருக்கும் ஆப்பு...!

அணைகளில் தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுக்கிறது என்றும் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு எதிரான கர்நாடக அரசின் பதில் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு அளித்துள்ளது. அணைகளில் தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகா மறுக்கிறது என்றும் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் 88 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 10 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாமல், டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 139-வது கூட்டத்தில், காவிரியில் 15 நாட்களுக்கு தினந்தோறும் ஒரு டிஎம்சி வீதம் தண்ணீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்று, காவிரி மேலாண்மை ஆணையமும் 15 நாட்களுக்கு மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

இதையும் படிங்க: 1 வருஷத்துக்கு.. கர்நாடகாவில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை.. CM டி.கே சிவக்குமார் அதிரடி ஆக்ஷன்..!!

இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும், வறட்சி காலங்களில் நீதிமன்றம் வரையறுத்த தண்ணீரை திறந்துவிடக் கோருவது நியாயமல்ல என்றும் கர்நாடகா குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, இந்த அவசர மனுவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்க மனு அளித்துள்ளது. அணைகளில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுக்கிறது என்று தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடக அரசு அமல்படுத்துவது கிடையாது என்றும், தமிழ்நாடு அரசு ஒவ்வொரு முறையும் தண்ணீரைப் பெறுவதற்கு சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, கர்நாடக அரசின் உண்மைக்குப் புறம்பான அவசர மனுவை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் நடைமுறைப்படுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் திமுக சார்பில் தொடரப்பட்ட மனுக்கள் வரும் 17-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகா பந்த் எதிரொலி.. பெங்களூரில் நாளை பஸ் முதல் பள்ளி, கல்லூரி வரை நிலை என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share