×
 

41 பேர் இறந்ததற்கு வீட்டிற்கு அழைத்து துக்கம் விசாரிப்பதா? விஜய்யை கடுமையாக சாடிய சரத்குமார்!

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் இன்று பெரம்பூரில்  பிரச்சாரம் மேற்கொண்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும் நடிகருமான சரத்குமார் இன்று அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார். 'நாட்டாமை பாடுபட்டா' என்ற சினிமா பாடல்கள் முழங்கத் திறந்தவெளி வாகனத்தில் வந்த அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

சமீபத்தில் விஜய்யின் பரப்புரையில் நிகழ்ந்த அசம்பாவிதங்கள் குறித்துச் சரத்குமார் பேசுகையில்: நாங்கள் 1996 முதல் மக்களைச் சந்தித்து வருகிறோம்; ஒரு அசம்பாவிதம் கூட நடந்ததில்லை. ஆனால், விஜய்யின் கூட்டத்தில் 41 பேர் இறந்ததற்கு, அவர்களின் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்துத் துக்கம் விசாரிப்பார்களா? இதைவிட ஈனமான செயல் இருக்குமா? எனச் சாடினார். துக்க வீட்டிற்கு வந்த இடத்தில் செல்பி எடுக்கக்கூடாது என்று ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாதவரா எதிர்காலத் தலைவர்? எனக் கேள்வி எழுப்பினார்.

விஜய்யின் கொள்கைகள் மற்றும் அரசியல் செயல்பாடுகள் குறித்துச் சரத்குமார் விமர்சிக்கையில்: இலவசத்தை எதிர்ப்பேன் என்று சொன்னவர், இப்போது கார், பைக் கொடுப்பேன் என்கிறார். 10 லட்சம் கோடி கடனைச் சீர் செய்ய இவரிடம் என்ன திட்டம் இருக்கிறது? சிதம்பரம் குடும்பத்திற்காகக் காங்கிரஸ் கட்சியை திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் உதயநிதி வீட்டில் சிபிஐ ரைடு நடந்தது என்பதை மறக்கக்கூடாது.

இதையும் படிங்க: ஐயா ராமதாஸ் நலமுடன் இருக்கிறார்..!! மருத்துவர் சொன்ன ஆறுதல் தகவல்..!!

விஜய்யின் 'ஜனநாயன்' திரைப்படம் இணையத்தில் வெளியானதற்கு பாஜகவைச் சம்பந்தப்படுத்துவது அபத்தமானது என்றார் சரத்குமார்: ஹார்ட் டிஸ்க் தயாரிப்பாளர் வசமே இருக்கும்போது, இதில் எப்படி சிபிஐ-க்கும் எல்.முருகன் அவர்களுக்கும் தொடர்பு இருக்கும்? இது தேவையில்லாமல் அரசியல் ஆக்கப்படுகிறது. எங்களது படத்திற்கும் இதே நிலை வந்தபோது சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் சொன்னோம், அதுதான் முறை.

விஜய் ஏன் அதிமுகவை விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு நையாண்டியாகப் பதிலளித்த அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெல்வார் என்பது விஜய்க்குத் தெரியும். வம்பில் சிக்க வேண்டாம் என்பதற்காகப் பேசாமல் இருக்கலாம். மீண்டும் ஊட்டியில் கைகட்டி நிற்க வேண்டிய நிலை வந்துவிடக்கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் போல என கிண்டல் செய்தார்.

பொன்னப்பன் தெருவில் பிரச்சாரத்தை முடித்த சரத்குமார், அங்கிருந்த ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்து பொதுமக்களைக் கவர்ந்தார். மேலும், என் மனைவி ராதிகா நடித்த 'தாய் கிழவி' படம் பார்த்தீர்களா? என நகைச்சுவையாக விசாரித்தபடி வாக்கு சேகரித்தார். திமுக அரசின் 10.73 லட்சம் கோடி கடன் சுமை குறித்து மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என வலியுறுத்திய அவர், திலகபாமாவிற்குப் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: பரப்புரையில் திடீரென மயங்கிய ராமதாஸ்..!! அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றிய நிர்வாகிகள்..!! பரபரப்பு சம்பவம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share