அடிமை அதிமுக-வின் முதுகில் ஏறி வரும் பாஜக-வைத் தடுப்போம்! நெல்லையில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின்பிரச்சாரம்!
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையத் தயாராகிவிட்டேன், நீங்கள் தயார்தானா? என்ற கேள்வியோடு, வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின்பிரச்சாரம்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நெல்லைச் சீமையில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தனது அனல் பறக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு 11-வது தோல்வி ஸ்டிக்கரை ஒட்டத் தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். ஏனென்றால், இந்தத் தேர்தல் களத்தில் இருப்பது ஒரு 'சூப்பர் ஸ்டார்'. அந்தச் சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு சின்னக் குழந்தையைக் கேட்டால் கூடச் சொல்லும் - அதுதான் திமுக-வின் தேர்தல் அறிக்கை எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
அதிமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்த அவர், "மகளிர் உரிமைத் திட்டத்தை நாம் அறிவித்தபோது, இதைச் செயல்படுத்தவே முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்தார். ஆனால், இன்று அதே திட்டத்திற்கு 'குலவிளக்கு' என்று பெயரிட்டுப் புது ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு மக்களிடம் வருகிறார். இதுதான் அதிமுக-வின் போலி அரசியல்" எனச் சாடினார்.
இதையும் படிங்க: ₹8,000 கூப்பன் திட்டம் - வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! முதலமைச்சருக்கு விக்ரமராஜா நன்றி!
அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த துயரச் சம்பவங்களை வரிசைப்படுத்திய முதலமைச்சர்: சாத்தான்குளம் தந்தை-மகன் காவல் மரணம். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் சிஏஏ (CAA) ஆகியவற்றிற்கு ஆதரவாகக் கையெழுத்திட்டு, தமிழகத்தின் உரிமைகளை டெல்லிக்கு அடகு வைத்தவர் பழனிசாமி எனக் குற்றம் சாட்டினார்.
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய அவர், தலைவர் கலைஞர் மறைந்தபோது, மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கேட்டு உங்களிடம் (அதிமுக அரசு) வந்து கெஞ்சி நின்றேன். அப்போது நீங்கள் அனுமதி கொடுத்தீர்களா? எங்கள் தலைவரைப் பற்றிப் பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை என ஆவேசமாகக் கூறினார்.
நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார்:
திருநெல்வேலி: மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் (உதயசூரியன் சின்னம்).
ராதாபுரம்: சபாநாயகர் அப்பாவு – சட்டமன்றத்தைத் திறம்பட நடத்திய ஆசிரியர் எனப் பாராட்டு.
நாங்குநேரி: காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் (கை சின்னம்).
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையத் தயாராகிவிட்டேன், நீங்கள் தயார்தானா? என்ற கேள்வியோடு, உதயசூரியன் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிச் சின்னங்களுக்கு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அதிமுக அமித் ஷா கையில், திமுக கலைஞரிடமே இருந்தது! கரூரில் எடப்பாடி பழனிசாமியைச் சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!