முடிவுக்கு வரும் வர்த்தக பதற்றம்.. பங்காளி சண்டையை மறந்து அமெரிக்கா, சீனா பேச்சுவார்த்தை..!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அமைச்சரவையின் பிரதிநிதிகள் ஜூன் 9ம் தேதி லண்டனில் சீன அமைச்சரவையை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்தார்.
அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்து வருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் (சற்று தள்ளுபடியுடன்) வரி விதிப்பதாக அறிவித்து அதிா்வலையை ஏற்படுத்தினாா் டிரம்ப்.
அப்போது அவா் வெளியிட்டுள்ள பட்டியலின்படி, சீன பொருள்கள் மீது 34 சதவீதம் கூடுதல் வரி அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, பதிலுக்கு அமெரிக்க பொருள்கள் மீது கூடுதலாக 34 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ஏப். 10-ஆம் தேதி அது அமலுக்கு வரும் என்றும் அறிவித்தது.
இதையும் படிங்க: பயண தடையை நீக்குங்க.. டிரம்ப்பிடம் கெஞ்சும் அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கான் மக்கள்..!
அதையடுத்து, சீன பொருள்கள் மீது மேலும் 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தாா். இதன் மூலம், டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் சீன பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விகிதம் 104 சதவீதமாக அதிகரித்தது.
இதற்குப் பதிலடியாக, ஏப். 10-ஆம் தேதி அமலுக்கு வரவிருக்கும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பை 84 சதவீதமாக சீனா தற்போது உயா்த்தியுள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவுக்கு 125 சதவீதம் வரி வதிப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அறிவித்தது.
இதனை அடுத்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% வரியை விதித்தார் ட்ரம்ப். இதற்கு போட்டியாக சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தது. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான இந்த வர்த்தக மோதல் சர்வதேச அளவில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியது. சர்வதேச பொருளாதாரமும் ஸ்தம்பித்து போனது.
உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரப் போா் பதற்றம் புதிய உச்சத்தை அடைந்தது. இந்த சூழலில் முதற்கட்ட நடவடிக்கையாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இரு நாடுகளும் 90 நாட்களுக்கு இந்த வரி விதிப்பை நிறுத்தி வைப்பதற்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இந்த 90 நாட்களுக்கும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 30 சதவீதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர், வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அமைச்சரவையின் பிரதிநிதிகள் ஜூன் 9ம் தேதி லண்டனில் சீன அமைச்சரவையை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்தார். இது குறித்து சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, தூதர் ஜேமிசன் கிரீர் ஆகியோர் ஜூன் 9ம் தேதி லண்டனில் சீன பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கூட்டம் மிக சிறப்பாக நடக்க வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: புதினிடம் ஒரு மணி நேரம் போனில் பேசிய டிரம்ப்... எதை பற்றி பேசினார்கள்? வெளியான முக்கிய தகவல்!!