சமயபுரம் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்! கோயில் வளாகத்தில் படுத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
திருச்சி சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் உறங்கிக் கொண்டிருந்த பக்தர் சம்பவ இடத்திலேயே பலி - இருவர் மருத்துவமனையில் அனுமதி
திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவில் சன்னதி வீதி மண்டபத்தின் மேற்கூரை (சீலிங்) இடிந்து விழுந்ததில், உறங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரு பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தின் முக்கிய சக்தி தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் இந்தக் கோவிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தருவது வழக்கம். இரவு தங்கி, காலையில் அம்மனை தரிசனம் செய்து செல்வதும் பொதுவான நடைமுறையாக உள்ளது.
இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது நதியா என்பவரும் அவரது உறவினர்களும் கோவில் சன்னதி வீதி மண்டபத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென மண்டபத்தின் மேற்கூரை காங்கிரீட் பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் நதியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த மற்ற இரு பெண் பக்தர்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.
இதையும் படிங்க: நாளை திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!! புதிய கட்டுப்பாடுகள் அமல்!! பாஜ தொண்டர்கள் உற்சாகம்!
உடனடியாக அருகில் இருந்த பக்தர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், பேரிக்காடுகளைப் பயன்படுத்தி சன்னதி வீதியை முழுமையாக அடைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் கோபத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கோவில் பராமரிப்பு பணிகளில் கவனக்குறைவு இருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சோக சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் உடனடியாக இந்த விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: கணவர் கொலைக்கு நீதி வேண்டும்!! அதற்காகவே போட்டியிடுகிறேன்! பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உருக்கம்!