மேற்காசிய போர் பதற்றம்! மோடி - ட்ரம்ப் ஆலோசனை!! அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போருக்கு பின் முதல்முறை!
ஹோா்முஸ் நீரிணையின் பாதுகாப்பு உள்பட மேற்காசிய நிலவரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனா்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். இது, அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்குப் பிறகு இரு தலைவர்களும் முதல் முறையாகப் பேசிய சந்திப்பாகும். பிப்ரவரி 28 அன்று தொடங்கிய மேற்காசியப் போர் இன்னும் தொடரும் நிலையில், உலகப் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு மற்றும் திறப்பு குறித்து இருவரும் ஆழமாக விவாதித்தனர்.
ஹார்முஸ் நீரிணை என்பது பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையே அமைந்துள்ள முக்கிய கடல் பாதை. உலகின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இங்கு வழியாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
போர் தொடங்கியதும் ஈரான் இந்த நீரிணையை மூடியதால், உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகளில் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எரிபொருள் இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரிக்ஸ் நடுநிலையா செயல்படணும்! போரை நிறுத்த இந்தியாவுக்கு அழுத்தம் தரும் ஈரான்! தர்மசங்கடத்தில் மோடி!
டிரம்ப் திங்கள்கிழமை ஈரான் மீதான தாக்குதலை ஐந்து நாட்கள் நிறுத்துவதாக அறிவித்தார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க காலக்கெடு நீட்டிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் அவர் மோடியுடன் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்காசிய நிலவரம் குறித்து ஆக்கபூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். கூடிய விரைவில் பதற்றத்தைத் தணித்து அமைதியை மீட்டெடுக்க இந்தியா ஆதரவு தருகிறது. ஹார்முஸ் நீரிணையின் திறப்பும், பாதுகாப்பும், தடையற்ற அணுகலும் ஒட்டுமொத்த உலகுக்கும் அவசியம்” என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் கூறுகையில், “உலகளாவிய கப்பல் போக்குவரத்துக்கு ஹார்முஸ் நீரிணையின் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்” என்றார்.
போர் தொடங்கியதிலிருந்து பிரதமர் மோடி இஸ்ரேல், ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து தனது பங்கை ஆற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகள் பலவும் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வரும் நிலையில், இந்த மோடி-டிரம்ப் உரையாடல் அமைதிக்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் விலை உயர்வு, உணவுப் பொருள் பாதிப்பு உள்ளிட்ட பொருளாதார சவால்களை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா தனது எண்ணெய் இறக்குமதி தேவைகளை பாதுகாக்கவும், உலக அமைதிக்கு ஆதரவு அளிக்கவும் முனைப்புடன் இருப்பதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: BREAKING! 48 மணிநேரம் கெடு!! ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால்?!! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் வார்னிங்!